பலத்த காற்று, கொந்தளிப்பான கடல் தொடர்பில் கடற்படை, மீனவர்களுக்கு எச்சரிக்கை


நாட்டின் சில கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், கடல் கொந்தளிப்பாகக் காணப்படும் என்பதால், கடற்படையினர் மற்றும் மீன்பிடி சமூகத்தினர் குறித்த கடல் பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அனர்த்த அவசர எச்சரிக்கை நிலையத்தினால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று (06) வியாழக்கிழமை காலை 10:00 மணிக்கு வெளியிடப்பட்டுள்ள இந்த எச்சரிக்கையானது நாளை (07) வெள்ளிக்கிழமை காலை 10:00 மணி வரை 24 மணி நேரத்திற்குச் செல்லுபடியாகும்.

மாத்தறையிலிருந்து அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கடல் பகுதிகள் மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.

காற்றின் வேகம் மணிக்கு 60 முதல் 70 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

கடற்படையினர் மற்றும் மீனவர்கள் மறுஅறிவித்தல் வரை இக்கடல் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என முற்றுமுழுதாக அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பிலிருந்து திருகோணமலை, காங்கேசந்துறை, புத்தளம், கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையிலான கடல் பகுதிகள் அவ்வப்போது கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.

காற்றின் வேகம் மணிக்கு 50 முதல் 60 கி.மீ வரை அதிகரிக்கும்.

இக்கடல் பகுதிகளில் தொழிலில் ஈடுபடும் மீனவர்களும் கடற்படை அதிகாரிகளும் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வானிலையில் ஏற்படும் விரைவான மாற்றங்கள் குறித்துக் கடற்படையினரும் மீன்பிடிச் சமூகத்தினரும் விழிப்புடன் இருக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

கடலுக்குச் செல்வதற்கு முன்பாக வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிடும் அடுத்தடுத்த வானிலை அறிக்கைகளைத் தொடர்ந்து அவதானிக்குமாறு கோரப்பட்டுள்ளனர்.