நாளை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை: 2.94 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் தோற்றுகின்றனர்!


நாடளாவிய ரீதியில் உள்ள 2,723 பரீட்சை மத்திய நிலையங்களில் இம்முறை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நாளை ஞாயிற்றுக்கிழமை (09) நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.

இம்முறை பரீட்சைக்காக மொத்தம் 2,94,089 விண்ணப்பதாரர்கள் தோற்றவுள்ளதுடன், அவர்களில் சிங்கள மொழியில் 2,20,366 மாணவர்களும், தமிழ் மொழியில் 73,723 மாணவர்களும் பதிவு செய்துள்ளனர்.

பரீட்சைக்கான மேலதிக வகுப்புகளை நடத்தும் காலம் ஆகஸ்ட் 05 ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடைந்துள்ளது. பரீட்சை முடியும் வரை அச்சு அல்லது மின்னணு ஊடகங்கள் வாயிலாக புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான விளம்பரங்களை மேற்கொள்வது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.

மேலும், பெற்றோர்கள் பரீட்சை நிலைய வளாகத்திற்குள் நுழைவதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என்றும் ஆணையாளர் நாயகம் தெளிவுபடுத்தியுள்ளார்.

மாணவர்களின் மன அமைதியைப் பேணி, பதற்றமின்றி பரீட்சையை எதிர்கொள்வதற்கு ஏதுவாக, பரீட்சை தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே (காலை 8.30 மணிக்கு) பரீட்சை நிலையங்களுக்கு வருமாறு பரீட்சைத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

இரண்டாம் வினாத்தாள் (முதலாவதாக வழங்கப்படும்): காலை 9.30 மணி முதல் காலை 10.45 மணி வரைமுதல் வினாத்தாள்: காலை 11.15 மணி முதல் நண்பகல் 12.15 மணி வரை பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் வினாத்தாளில் உள்ள அறிவுறுத்தல்களை நன்றாக வாசித்து, தங்களது பரீட்சை சுட்டெண்ணை சரியாகக் குறிப்பிட்டு, தெளிவான கையெழுத்தில் வினாத்தாளிலேயே பதிலளிக்க வேண்டும்.

அத்துடன், கையடக்கத் தொலைபேசிகள், ஸ்மார்ட் கடிகாரங்கள், குறிப்புகள் அல்லது ஏனைய இலத்திரனியல் சாதனங்கள் எதையும் பரீட்சை மண்டபத்திற்குள் கொண்டு வர முற்றாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.