உள்ளூராட்சி மன்றங்களின் வருமானத்தை அதிகரிக்க 2,500 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு


அரசாங்கத்தினால் “வளமான நாடு - அழகான வாழ்க்கை“  தேசிய திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களின் வருமானத்தைப் பெருக்கும் நோக்கில், வரவு செலவுத் திட்டத்தின் கீழ் 2,500 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட பிரதேச ஒருங்கிணைப்புக் குழு தலைவர் கந்தசாமி பிரபுவின் முன்மொழிவிற்கு அமைவாக பொது நிர்வாக அமைச்சினால்  மாவட்டத்திற்கு 2500 மில்லியன் நிதியின் கீழ் ஏறாவூர் பற்று, மண்முனை தென்மேற்கு, வவுணதீவு ஆகிய பிரதேச சபைகளுக்கு முக்கிய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டது.

இத்திட்டத்தின் மூலம் வந்தாறுமூலையில் நான்கு கடைத் தொகுதிகள் மற்றும் வரவேற்பு மண்டபம் அடங்கிய இரண்டு மாடிக் கட்டடம் அமைத்தல்,  மண்முனை தென்மேற்கு பிரதேசத்தில் உள்ள மண்முனை பாலத்திற்கும் அருகில் பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் பொழுதுபோக்கு படகுச் சேவையை ஆரம்பித்தல், மற்றும் வவுணதீவு பகுதியில் மீன் சந்தைக்கான புதிய கட்டடத்தை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று முன்தினம் (14) நடைபெற்றது.

அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களின் வருமானத்தை அதிகரிக்கும் வகையில், பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக இந்த நிதி பயன்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.