மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் அவர்கள் இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகரை இன்று மட்டக்களப்பிலுள்ள தனியார் விடுதியொன்றில் சந்தித்து முக்கியத்துவம் வாய்ந்த இருதரப்புக் கலந்துரையாடலை மேற்கொண்டார்.
இந்தச் சந்திப்பின் போது மட்டக்களப்பு மாவட்ட மக்கள் நீண்டகாலமாக எதிர்நோக்கி வரும் காணி அபிவிருத்தி வாழ்வாதாரம் மற்றும் அரசியல் பிரதிநிதித்துவம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் நீண்டகாலமாக நிலவி வரும் அரச காணி உரிமைப் பிரச்சினைகள், மகாவலி விரிவாக்கத் திட்டங்களால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், வன மற்றும் வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களங்களின் எல்லை நிர்ணயங்கள் தொல்பொருள் திணைக்களத்தின் நடவடிக்கைகள் காரணமாக உருவாகியுள்ள காணி உரிமைச் சிக்கல்கள் ஆகியவை குறித்து விரிவாக விளக்கமளிக்கப்பட்டதுடன் பாரம்பரியமாக வாழ்ந்து வரும் மக்களின் நில உரிமைகளைப் பாதுகாப்பதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.
அத்துடன் மாவட்டத்தின் அபிவிருத்தித் திட்டங்களில் காணப்படும் பின்னடைவு இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பின்மை மீனவர்கள் மற்றும் விவசாயிகள் எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடிகள் கல்வி மற்றும் சுகாதார வசதிகளை மேம்படுத்த வேண்டிய தேவை வெள்ளப் பாதிப்புகள் மற்றும் நீர்ப்பாசனப் பிரச்சினைகள் போரால் பாதிக்கப்பட்ட மக்களின் மீள்குடியேற்றம் மற்றும் நிலையான வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த வேண்டிய அவசியம் போன்ற விடயங்களும் கலந்துரையாடலில் இடம்பெற்றன.
இலங்கை – நியூசிலாந்து இருதரப்பு உறவுகளின் அடிப்படையில் பொருளாதார ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடல் நடைபெற்றது.
குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தின் சுற்றுலாத் துறையில் காணப்படும் பெரும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும் சுற்றுலா முதலீடுகளை ஈர்ப்பதற்கும் உள்ளூராட்சி மன்றங்களின் முன்னுரிமைகள் மற்றும் உள்ளூர் தேவைகளுக்கு ஏற்ப நியூசிலாந்து முதலீட்டாளர்களை இணைத்துச் செயல்படுவதற்கும் ஒத்துழைப்பு வழங்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
மேலும் உலகின் முன்னணி பால் உற்பத்தி நாடுகளில் ஒன்றாக விளங்கும் நியூசிலாந்தின் தொழில்நுட்பம் நிபுணத்துவம் மற்றும் முதலீடுகளை மட்டக்களப்பு மாவட்டத்தின் பால் உற்பத்தித் துறையின் வளர்ச்சிக்குப் பயன்படுத்துவது தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டது.
இலங்கையிலிருந்து நியூசிலாந்துக்குச் செல்லவுள்ள பால் பண்ணை ஆய்வுக் குழுவின் கவனத்திற்கு மயிலத்தமடு பண்ணையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்இ மாவட்டத்தின் பால் உற்பத்தி வாய்ப்புகள் மற்றும் முதலீட்டுத் தேவைகள் எடுத்துரைக்கப்பட வேண்டியதன் அவசியத்தை எம்.பி. சாணக்கியன் இராசமாணிக்கம் வலியுறுத்தினார்.
நியூசிலாந்தின் தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் முதலீடுகளின் ஊடாக மட்டக்களப்பில் பால் உற்பத்தியை அதிகரிப்பதுடன் பால் சார்ந்த தொழில்துறைகளை உருவாக்கி புதிய வேலைவாய்ப்புகளையும் உள்ளூர் மக்களுக்கான நிலையான வருமான வாய்ப்புகளையும் உருவாக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்தச் சந்திப்பின் மூலம் மட்டக்களப்பு மாவட்ட மக்களின் நீண்டகாலப் பிரச்சினைகள் அபிவிருத்தித் தேவைகள் மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் நியூசிலாந்தின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டதுடன் எதிர்காலத்தில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தி மாவட்டத்தின் நிலையான வளர்ச்சிக்கான நடைமுறை முயற்சிகளை முன்னெடுக்க இருதரப்பினரும் இணக்கம் தெரிவித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

.jpeg)
.jpeg)