நாட்டின் முல்லைத்தீவு, வவுனியா, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்தும் பகல் வேளையில் அதிகரித்த வெப்பநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி, மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின் அளவான 'வெப்பச் சுட்டெண்' இன்றைய தினம் பகல் வேளையில் இந்த மாவட்டங்களின் சில இடங்களில் 'எச்சரிக்கை மட்டத்தை' எட்டக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெப்பநிலை அதிகரிப்பால் உடலில் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அறிவுறுத்தல்கள்:
சூரிய ஒளியில் நீண்ட நேரம் நேரடியாக வேலை செய்வதகாலும், வெளியில் நடமாடுவதாலும் அதிக சோர்வு மற்றும் தசைப்பிடிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே, பொதுமக்கள் போதியளவு தண்ணீர் அல்லது திரவ உணவுகளை அருந்தி உடலை எப்போதும் நீர்ச்சத்துடன் வைத்திருங்கள்.
கடுமையான உடலுழைப்பைக் கோரும் வெளிப்புறச் செயல்பாடுகளைக் குறைத்துக் கொள்ளுங்கள் அல்லது தவிர்க்கவும்.
இலகுவான மற்றும் வெள்ளை அல்லது வெளிர் நிற ஆடைகளை அணியுங்கள்.
வீட்டில் உள்ள வயோதிபர்கள் மற்றும் நோயாளிகள் தொடர்பில் அவதானமாக இருங்கள். வாகனங்களில் குழந்தைகளைத் தனியாக விட்டுச் செல்ல வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
