143 களஞ்சியசாலைகளில் திங்கள் முதல் நெல் கொள்வனவு ஆரம்பம் - நெல் சந்தைப்படுத்தல் சபை

நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஊடாக நெல் கொள்வனவு நடவடிக்கைகளை எதிர்வரும் திங்கட்கிழமை (13) முதல் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்று நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் மஞ்சுள பின்னலந்த தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

 அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது வடக்கு, கிழக்கு மற்றும் அம்பாறை ஆகிய பகுதிகளில் நெல் அறுவடை பெருமளவில் ஆரம்பமாகியுள்ளதால், முதற்கட்டமாக அந்தப் பிரதேசங்களை மையமாகக் கொண்டு நெல் கொள்வனவு முன்னெடுக்கப்படவுள்ளது.

இம்முறை நெல் சந்தைப்படுத்தல் சபை ஒரு கிலோ நாடு நெல்லை 120 ரூபாவுக்கும், ஒரு கிலோ சம்பா நெல்லை 130 ரூபாவுக்கும், ஒரு கிலோ கீரி சம்பா நெல்லை 140 ரூபாவுக்கும் கொள்வனவு செய்யவுள்ளதுடன், நெல் கொள்முதலுக்காக தற்போது களஞ்சியசாலைகள் பொறுப்பேற்கப்பட்டுள்ளது.

இதன்படி, முதற்கட்டமாக 143 இடங்களில் உள்ள களஞ்சியசாலைகளில் நெல் கொள்வனவு செய்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதுடன், ஒருவேளை இந்தக் களஞ்சியசாலைகள் முழுமையாக நிரம்பினால், அருகில் உள்ள தனியார் துறை களஞ்சியசாலைகளைப் பெற்றுக்கொள்வது குறித்தும் தற்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

அரசாங்கத்தினால் நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு 6,000 மில்லியன் ரூபா நிதி வழங்கப்பட்டுள்ளதுடன், அதற்கு மேலதிகமாக வைப்புக் கடன் திட்டத்தின் கீழ் 10,000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் சிறு மற்றும் நடுத்தர அளவிலான நெல் ஆலை உரிமையாளர்களுக்கு நெல் இருப்புகளைச் சேகரிப்பதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதுடன், இந்த ஒட்டுமொத்த செயல்பாடுகளையும் விவசாய நல்வாழ்வு மேம்பாட்டுத் திணைக்களம் கண்காணிக்கும்.

மேலும், இம்முறை தகுதியுடைய கூட்டுறவுச் சங்கங்களுக்கும் இந்தக் கடனை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நெல் சந்தைப்படுத்தல் சபை எப்போதும் தரப்படுத்தப்பட்ட நெல்லையே கொள்வனவு செய்யும். ஏனெனில், இதனை ஒரு பாதுகாப்பு இருப்பாக நாம் குறிப்பிட்ட காலம் வரை வைத்திருக்க வேண்டிய தேவையுள்ளது.

முக்கியமாக, இந்தச் போகத்தில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை மட்டுமே நாம் கொள்வனவு செய்வோம் என்றார்.