வங்காள விரிகுடாவின் தென்மேற்கு பகுதியில் இலங்கைக்கு தென்கிழக்கே நிலவும் காற்றுச் சுழற்சி நாளை காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாற்றம் பெறவுள்ளது.
இது அடுத்து வரும் நாட்களில் இலங்கையின் கிழக்கு மற்றும் வடக்கு கரையோரமாக வடக்கு நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் நேற்று (08.05.2026) முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகள் உட்பட நாட்டின் பல பகுதிகளுக்கும் கிடைக்க தொடங்கியுள்ள மழை எதிர்வரும் 13.05.2026 வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மழை நாளை முதல் பரவலடைவதோடு செறிவடையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக நாளை (10.05.2026) முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் இதனால் மிக கனமழையைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் அனைத்து மாவட்டங்களிலும் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. அத்தோடு இந்தக் காற்றழுத்த தாழ்வு நிலையினால் இலங்கையின் ஊவா மாகாணம், மத்திய மாகாணம், தென் மாகாணம், வடமேல் மாகாணம், மேல் மாகாணம் என்பவற்றின் பல பகுதிகளுக்கும் கன மழை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக நாளை(10.05.2026) பிற்பகலில் முல்லைத்தீவு, வவுனியா, கண்டி, மட்டக்களப்பு, காலி, களுத்துறை மாவட்டங்கள் கனமழையைப் பெறும் வாய்ப்புள்ளது.
நாளை(10.05.2026) மாலை குறிப்பாக 5.30 மணிக்கு பின்னர் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் பல பகுதிகளுக்கும் கனமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
அதேவேளை நாளை பிற்பகல் 3.00 மணியளவில் வடமேல் மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் கனமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
நாளை மறுதினம் (11.05.2026) பிற்பகல் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, அனுராதபுரம், தம்புள்ளை, கண்டி, மட்டக்களப்பு, நுவரெலியா மற்றும் மொனராகலை மாவட்டங்கள் கனமழையைப் பெறும்.
நாளை மறுதினம் (11.05.2026) பிற்பகல் 3.00 மணியளவில் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும், பதுளை மாவட்டத்திற்கும், வடக்கு மாகாணத்தின் கிழக்கு பகுதிகளுக்கும் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
எதிர்வரும் 12.05.2026 பிற்பகலில் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும், பதுளை, முல்லைத்தீவு, வவுனியா, கிளிநொச்சி, மன்னார் மாவட்டங்களுக்கும் கனமழை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே கடந்த சில நாட்களாக கிடைத்து வரும் கன மழை காரணமாக இலங்கையின் பல பகுதிகளிலும் குளங்கள் மற்றும் ஆறுகள் வான் பாயத் தொடங்கியுள்ளன.
எனவே இந்த காற்றழுத்த தாழ்வு நிலையினால் கிடைக்க விருக்கும் கனமழை சில பகுதிகளுக்கு வெள்ள அனர்த்தத்தை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்தோடு மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் ஏற்கெனவே கன மழை கிடைத்தது வருகிறது. பல பகுதிகளில் நிலம் முழு நீர்க்கொள்ளளவோடு உள்ளது. இப்பகுதிகளில் தொடர்ந்தும் கன மழை கிடைக்கும் வாய்ப்புள்ளதனால் நிலச்சரிவு நிகழ்வுகள் தொடர்பில் மத்திய மற்றும் ஊவா மாகாண உறவுகள் மிக அவதானமாக இருப்பது அவசியம்.
அத்தோடு நாளை மறுதினம் முதல் முதல் இலங்கையின் தெற்கு, கிழக்கு, வடக்கு கடற்பகுதிகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் மீனவர்கள் நாளை மறுதினம் முதல் இக்கடற்பகுதிகளுக்கு மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்ப்பது சிறந்தது.
கடந்த ஆண்டும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மே மாதம் அதிக மழை கிடைத்திருந்தது. குறிப்பாக வரலாற்றின் அதி கூடிய மழை கிடைத்த மே மாதமாக கடந்த ஆண்டு மே மாதம் விளங்கியது. இவ்வாண்டும் மே மாதம் கன மழையைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.




