ஹர்தாலுக்கு த.மு.கூ ஆதரவு

 


எதிர்வரும் 15ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஹர்தாலை ஆதரிப்பதாகவும் ஹர்த்தால் சொல்லும் செய்தியை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க கவனத்தில் எடுக்க வேண்டும் என த.மு.கூ தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

ஐந்து தமிழ் இளைஞர்கள், கடந்த 8ஆம் திகதி முத்தையன் கட்டு இராணுவ முகாமுக்கு சிப்பாய்களால் அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

பின்னர் அவர்கள் அந்த முகாமில் இருந்து தப்பி சென்றதாக கூறப்படுகிறது.

தப்பி சென்றவர்களில் ஒருவரான, கபில் ராஜ், கடந்த 9ஆம் திகதி முல்லை முத்தையன் கட்டு குளத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தப்பி சென்ற ஏனைய நால்வர், தம்மை இராணுவத்தினர் கடுமையாக தாக்கி சித்திரவதை செய்ததாக குற்றம் சாட்டியுள்ளனர்.

ஆகவே என்ன நடந்தது என்பதை ஊகிப்பது கடினமானது அல்ல.

இந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இலங்கை தமிழரசு கட்சி, 'நீதியான விசாரணை', 'வடகிழக்கில் இருந்து மேலதிக இராணுவம் குறைப்பு' ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் வெள்ளிக்கிழமை 14 ஆம் திகதி நடத்தும் முழு அடைப்பு என்ற ஹர்த்தாலை தாம் ஆதரிக்கிறோம் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சர் அனுர குமார திசாநாயக்க, இது தொடர்பில் உடன் விசாரணை, தண்டனைக்கு உரிய சட்ட நடவடிக்கை, ஆகியவற்றை ஏற்பாடு செய்ய வேண்டும்.

அத்துடன் இதை அடிப்படையாக கொண்டு, வடக்கு கிழக்கின் மேலதிக இராணுவ பிரசன்னத்தை உடன் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

'இராணுவ பிரசன்னம் குறைப்பு' என்பதுதான் இந்த ஹர்த்தால் சொல்ல போகும் செய்தி.

போர் செய்த இராணுவம் சும்மா இருக்காது. அதிலும் இன அடிப்படையிலான போர் செய்த இராணுவ சிப்பாய்களின் மனங்களில் இனவாதம் தங்கி இருக்கத்தான் செய்யும்.

எனவே அவர்களை தென்னிலங்கைக்கு கொண்டு வந்து, 'குளம் வெட்டுவது, குளத்தில் தூர் எடுப்பது, வீதி அமைப்பது, வீடு கட்டுவது, ஹோட்டல் நடத்துவது, தோட்டம் செய்வது, காய்கறி சந்தை நடத்துவது' போன்ற இன்ன பிற அபிவிருத்தி பணிகளில், ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சர் அனுர குமார திசாநாயக்க, ஈடுபடுத்த வேண்டும்.

அரச இராணுவ பயங்கரவாதத்தை, நாம் அப்போதும் எதிர்த்தோம். இப்போதும் எதிர்கிறோம். எப்போதும் எதிர்ப்போம். வடக்கு கிழக்கில் அனைத்து மாவட்டங்களிலும் வெள்ளிக்கிழமை முழு அடைப்பு நடை பெற அழைப்பு விடுத்து இருக்கும் இலங்கை தமிழரசு கட்சியின் கோரிக்கையை, தமிழ் முற்போக்கு கூட்டணி வரவேற்று, ஆதரவை அறிவிக்கின்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.