மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம்(video)

கருப்பு ஜூலை பேரவலத்தை நினைவுகூர்ந்து மற்றும் செம்மணி புதைகுழிக்கும் வடக்கு கிழக்கில் நிகழ்த்தப்பட்ட மனித படுகொலைகளுக்கு நீதிவேண்டியும் இவைகள் மீள நிகழாமையை உறுதிப்படுத்தவும் வலியுறுத்தி மட்டக்களப்பு மாவட்ட கிறிஸ்தவ ஒன்றியத்தினரால்  கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.மட்டக்களப்பு காந்தி பூங்காவில் நடைபெற்ற இக்கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட கிறிஸ்தவ ஒன்றியத்தின் அருட்தந்தையர்கள், மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவினர்கள் மற்றும் சிவில் சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது கருப்பு ஜூலை ஸ்ரீலங்கா அரச பயங்கரவாதத்தின் கொடூரம், செம்மணி புதைகுழிக்கு சர்வதேச விசாரணை வேண்டும், தமிழர் தாயகத்தில் இலங்கை அரசாங்கத்தால் நிகழ்த்தப்பட்ட மனித புதைகுழிகளுக்கு சர்வதேச நீதி வேண்டும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி வேண்டும் என்கின்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சர்வதேச நீதிப்பொறிமுறையின் கீழ் வடகிழக்கில் நடந்த இனப்படுகொலைகள் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும் எனவும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.