போராளிகள் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் வடகிழக்கில் முன்னெடுக்கப்பட்டுவரும் இந்த போராட்டமானது கிழக்கின் மட்டக்களப்பில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளையும், புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்ட பின்னர் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்ட பின்பும் மீண்டும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள போராளிகளையும், புதிய அரசாங்கம் விடுவிக்க வேண்டும் என என்பதை வலியுறுத்தியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
இன்று காலை மட்டக்களப்பு பிரதான பஸ்நிலையத்தில் இந்த போராட்டம் போராளிகள் நலன்புரி சங்கத்தினால் நடாத்தப்பட்டது.
போராளிகள் நலன்புரி சங்கத்தின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் இ.செல்வநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் மட்டக்கப்பு மாவட்ட இலங்கை தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன்,தமிழ் தேசி மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ்,மாவட்ட அமைப்பாளர் குககுமார்,சிவில் சமூக செயற்பாட்டாளர் எஸ்.சிவயோகநாதன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்த போராட்டத்தின்போது மழைக்கும் மத்தியிலும் பெருமளவான மக்கள் ஆர்வத்துடன் வருகைதந்து கையெழுத்துப்போராட்டத்தில் பங்குகொண்டமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்,
பல ஆண்டுகளாக சிறையில்வாடிக்கொண்டிருக்கின்ற எமது விடுதலைக்காக போராடிய தமிழ் கைதிகளை விடுதலைசெய்யவேண்டும் என்கின்ற அறவழிப்போராட்டத்தினை முன்னெடுத்திருக்கின்றனர்.
பயங்கரவாத தடைச்சட்டம் என்னும் பெயரில் மிக மோசமான மனிதகுலத்திற்கு எதிரான சட்டம் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது.இதன்மூலம் அப்பாவிகளை கூட பயங்கரவாதிகள் என்ற பார்வைக்குட்படுத்தப்படும் மிக மோசமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டது.
தற்போது ஆட்சிக்குவந்த அரசாங்கம் இந்த சட்டத்தினை நீக்குவோம் என்னும் உத்தரவாதத்தினையளித்தும் கூட இன்னும் அந்த பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படவில்லை.இந்த நிலையில் இந்த கொடிய பயங்கரவாத சட்டத்தின் கீழ் எமது பத்து தமிழ் அரசியல் கைதிகள் தொடர்ந்து தடுத்துவைக்கப்பட்டுள்ளார்கள்.இவர்கள் விரைவாக விடுதலைசெய்யப்படவேண்டும்.இவர்கள் நீண்டகாலமாக சிறைச்சாலையில் கழித்துவிட்டார்கள்.இருக்கும்காலத்திலாவது தமது உறவுகளுடன் இணைந்துவாழ்வதற்கு மாற்றத்தினை உருவாக்கப்போவதாக கூறும் புதிய அரசாங்கம் அதனை செய்யவேண்டும்.
நாங்கள் ஜனாதிபதியை சந்தித்தபோது இந்த தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக சுட்டிக்காட்டியிருந்தோம்.சட்டமா அதிபருடன் பேசி தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை செய்வோம் என்று ஜனாதிபதி எம்மிடம் கூறியிருந்தார்.தாமதப்படுத்தாமல் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலைசெய்வதன் மூலம் நீங்கள் பாரபட்சமற்றவர்கள்,இனவாதிகள் அல்ல என்பதை நிரூபிக்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளீர்கள்.
இந்த கையெழுத்துப்போராட்டம் என்பது எந்தவித வன்முறை சார்ந்த விடயம் அல்ல.அகிம்சைவழிசார்ந்த ஜனநாயக வழிப்போராட்டமாகும்.
தமிழ் அரசியல் கைதிகள் தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடியவுர்கள்,தமிழர்களின் உரிமைக்காக போராடியவர்கள்.அந்த கைதிகளை அரசாங்கம் விடுதலைசெய்யவேண்டும்.
கடந்தகாலத்தில் மிகமோசமான கொலைக்குற்றவாளிகள் கூட பொதுமன்னிப்பின் அடிப்படையில் கடந்தகால அரசுகள் விடுதலைசெய்திருந்தது.ஏன் விடுதலைக்காக போராடியவர்களை விடுதலைசெய்யக்கூடாது என்பதை கேட்கவிரும்புகின்றோம்.
தற்போதுள்ள தேசிய மக்கள் சக்தி கூட ஒரு காலத்தில் புரட்சிகரமான மாற்றம் ஒன்றினை ஏற்படுத்துவதற்காக ஆயுதம் ஏந்தி போராடியவர்கள்.அவர்களுக்கு தமிழர்களின் விடுதலைப்போராட்டத்தினை விளங்கிக்கொள்ள அதிகநாட்கள் தேவையில்லை.ஆகவே தமது சமத்துவ உரிமைக்காக போராடிய தமிழ் அரசியல் கைதிகளை உடன் விடுதலைசெய்து அவர்களின் குடும்பங்களுடன் இணைந்துவாழ்வதற்கு நடவடிக்கையெடுக்கவேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.