மட்டக்களப்பு நகரில்மாபெரும் சிரமதானம்.


(சசி துறையூர்) 

வெள்ளத்தினால் கரையொதுங்கிய பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தின்களை அகற்றுவதற்கான மாபெரும் சிரமதான வேலைத்திட்டம்  நேற்று சனிக்கிழமை மட்டக்களப்பு மாநகரப் பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.

 வெள்ளத்தினால் பாரியளவில் பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தின் கழிவுகள் மட்டக்களப்பு நகர், நகரை அண்டிய நீர் நிலைகளின் கரையோரங்களில் தோங்கி காணப்பட்டன இதனை அகற்றுவதற்கான சிரமதானப் பணியினை தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும்,  மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் கழகங்களின் சம்மேளனமும்  இணைந்து நேற்று சனிக்கிழமை முன்னெடுத்தது.

ஜனதாஷா நிறுவனத்தின் அனுசரணையில் "எமது சூழலை நாம் பாதுகாப்போம், பொலித்தீன் அற்ற எமது மாநகரம்" என்ற தொனிப்பொருளில் நடைமுறைப்படுத்தப்பட்ட இச் சிரமதானப் பணியானது மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் சேவை அதிகாரியும் மாவட்ட இளைஞர் கழக சம்மேளன செயலாளருமாகிய மாணிக்கப்போடி சசிகுமாரின் ஏற்பாட்டில் மாவட்ட இளைஞர் கழக சம்மேளன தலைவர் ஜீ.சஞ்சீவ் தலைமையில் இடம் பெற்றது.

 இந் நிகழ்வில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் நிசாந்தி அருள்மொழி மற்றும் மாவட்ட இளைஞர் சேவை அதிகாரிகளான சதீஸ்வாரி கிருபாகரன், அ.தயாசீலன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

 நிகழ்வில்  இளைஞர் சேவை அதிகாரிகள், ஜனதாக்ஷா நிறுவன பிரதிநிதிகள் மாவட்ட சம்மேளன பிரதிநிதிகள் பிரதேச சம்மேளன பிரதிநிதிகள் என ஐம்பதுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இச் சிரமதானப் பணியானது மட்டக்களப்பு வாவிக்கரை பூங்காவில் ஆரம்பித்து மட்டக்களப்பு புதுப்பால சந்தி முதல் கொத்துக்குளத்து மாரியம்மன் ஆலயம் வரை மேற்கொள்ளப்பட்டது இதன்போது வெள்ளத்தினால் கரையொதுங்கிய பெருமளவான பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் பொருட்கள் அகற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.