வ்வுனியா வெடுக்குநாறிமலை ஆதிஇலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி தின ஏற்ப்பாடுகளை முன்னெடுத்துக்கொண்டிருந்த ஆலயத்தின் பூசகர் உட்பட இருவர் கைது!!


வ்வுனியா வெடுக்குநாறிமலை ஆதிஇலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி தின ஏற்ப்பாடுகளை முன்னெடுத்துக்கொண்டிருந்த ஆலயத்தின் பூசகர் உட்பட இருவர் நெடுங்கேணி பொலிசாரால் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டனர்.

நாளை மகாசிவராத்திரி தினத்தை முன்னிட்டு வெடுக்குநாறிமலையில் விசேட பூஜை வழிபாடுகளை மேற்கொள்வதற்கு ஆலய நிர்வாகத்தினர் முயற்சிகளை எடுத்திருந்தனர். 

இந்நிலையில் அவர்களது முயற்சிக்கு பொலிசாரால் தடங்கல் ஏற்ப்படுத்தப்பட்ட நிலையில் ஆலயத்தின் நிர்வாகத்தினால் வவுனியா நீதிமன்றில் நகர்த்தல் பத்திரம் தாக்கல்செய்யப்பட்டிருந்தது.

அதனை நேற்றுமுன்தினம் விசாரணைக்கு எடுத்த நீதிமன்றம் வெடுக்குநாறிமலை ஆலய விடயத்தில் நீதிமன்றம் ஏற்கனவே வழங்கிய கட்டளையின்படி செயற்படுமாறு ஆலய நிர்வாகத்திற்கு உத்தரவு வழங்கியது. 

இதனையடுத்து சிவராத்திரி தின ஏற்ப்பாடுகளை முன்னெடுப்பதற்காக இன்று மாலை உழவியந்திரத்தில் சென்றுகொண்டிருந்த பூசாரி உட்பட இருவர் நெடுங்கேணி பொலிசாரால் வழிமறிக்கப்பட்டு கைதுசெய்யப்பட்டனர்.

வெடுக்குநாறிமலை ஆலயத்தில் பூஜை வழிபாடுகளை மேற்கொள்வதற்கு வவுனியா நீதிமன்றம் கடந்தவருடம் உத்தரவு வழங்கியிருந்தது. அந்த உத்தரவை நேற்றுமுன்தினம் நீதிமன்றம் மீண்டும் உறுதிசெய்திருந்தது. இந் நிலையில் நீதிமன்ற தீர்ப்பினை மீறி பொலிசார் குறித்த இருவரை கைதுசெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.