ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம்


இராம பிரானால் வழிபடப்பட்ட ஆலயம் என்ற பெருமையினையும் பிதிர்கடன் தீர்க்கும் ஆடி அமாவாசை தீர்த்தோற்சவத்தினையும் கொண்ட வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் இன்று ஆயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோசத்துடன் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

மூர்த்தி,தீர்த்தம்,தலம் ஆகியனவற்றினை ஒருங்கே கொண்ட மாமாங்கேஸ்வரர் ஆலயமானது கிழக்கிலங்கையில் வரலாற்றுசிறப்புமிக்க ஆலயமாக கருதப்படுகின்றது.

வருடாந்த மஹோற்சவத்தினை முன்னிட்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை மட்டக்களப்பு வீரகத்திப்பிள்ளையார் ஆலயத்திலிருந்து கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு நடைபெற்றது.

ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ ஆதிசௌந்தரராஜ குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியர்களினால் இன்று காலை முதல் விசேட கிரியைகள் நடைபெற்று மூலவர் அபிசேகம் மற்றும் விசேட ஆராதனைகள் நடைபெற்றதுடன் கொடிச்சீலைக்கும் விசேட பூஜைகள் நடைபெற்றன.

அதனை தொடர்ந்து வசந்த மண்டபத்தில் விசேட பூஜைகள் நடைபெற்றதுடன் கொடிச்சீலை உள்வீதி வலம்வந்து கொடித்தம்பத்தில் விசேட பூஜைகள் நடைபெற்றன.

பூஜைகளை தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோசத்துடனும் நாத,வேத,மந்திரம் முழங்க,பூமழை பொழிய கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது.

கொடியேற்றத்தினை தொடர்ந்து கொடித்தம்பத்திற்கு விசேட பூஜைகள் நடைபெற்றதுடன் சுவாமி உள்வீதியுலா நடைபெற்றதை தொடர்ந்து பக்தர்களுக்கு ஆசி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

10தினங்கள் நடைபெறவுள்ள வருடாந்த மஹோற்சவத்தில் தினமும் பிற்பகல் தம்ப பூஜை சுவாமி உள்வீதியுலாவும் மாலையில் தம்ப பூஜை,வசந்த மண்டப பூஜை நடைபெற்று சுவாமி உள்வீதியுலா வெளிவீதியுலா நடைபெறவுள்ளது.

எதிர்வரும் 15ஆம் திகதி காலை 7.30மணிக்கு தேரோட்டமும் மறுதினம் 16ஆம் திகதி புதன்கிழமை நண்பகல் 12.00மணிக்கு மாமாங்கேஸ்ரவர் தீர்த்தக்குளத்தில் ஆடிஅமாவாசை தீர்த்தோற்சவமும் நடைபெறவுள்ளது. 

ஆலய வருடாந்த மஹோற்சவத்தினை முன்னிட்டு ஆலயத்திற்கு வரும் பக்தர்களின் நன்மை கருதி விசேட போக்குவரத்து ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதுடன் ஆலய வளாகத்தில் பக்தர்களின் நன்மை கருதி பல்வேறு வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.