எல்லைக்கல் நடும் பணிpகளை நிறுத்தி காணிகளை வழங்குமாறு அமைச்சரிடம் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் கோரிக்கை


மட்டக்களப்பில் குறிப்பாக கதிரவெளி தொடக்கம் காணப்படும் மக்களின் வாழ்வாதார மற்றும் குடியிருப்பு  காணிகளை எல்லைக் கற்கள் இட்டு வன இலாகாக்கு உட்படுத்தும்  நடவடிக்கைகளை நிறுத்தி,  அவற்றை மக்களுக்கு நிரந்தரமாக வழங்குவது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் மற்றும் வன இலாகா மற்றும் வன ஜீவராசிகள் அமைச்சின்  அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று அமைச்சில் நடைபெற்றது.

இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்களின் வாழ்வாதார காணிகளை வனபாதுகாப்பு என்ற கருப்பொருளின் கீழ் வனஇலாகா முன்னெடுத்துவரும் செயற்பாடுகள் குறித்து இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் இதன்போது அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.

யுத்த காலங்களில் இடம்பெயர்ந்து சென்றவர்கள் மீண்டும் தமது பகுதிக்கு சென்றுவாழும்போது கைவிடப்பட்ட பகுதிகள் காடுகளாக காணப்படுவதனால் வனஇலாகாவினர் அங்கு மக்கள் சென்று தமது செயற்பாடுகளை முன்னெடுப்பதை தடுப்பது குறித்தும் அது தொடர்பில் விரைவான நடவடிக்கையினை முன்னெடுப்பது குறித்தும் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார்.

எதிர்காலத்தில் மக்கள் நலனை கருத்தில் கொண்டு வாழ்வாதார மற்றும் குடியிருப்பு  காணிகளை எல்லைக் கற்கள் இட்டு வன இலாகாக்கு உட்படுத்தும்  நடவடிக்கைகளை நிறுத்தி,  அவற்றை மக்களுக்கு நிரந்தரமாக வழங்குவதற்கு நடவடிக்கையெடுக்குமாறு அமைச்சரிடம் கோரிக்கை விடுத்த நிலையில் அது தொடர்பிலான சாதகமான உறுதிமொழியை வழங்கியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தெரிவித்தார்.