ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் 589 வேலைத்திட்டங்கள்- ஒதுக்கப்பட்ட சுமார் 156 மில்லியன் ரூபாவும் 100 வீதம் செலவு!!


அம்பாரை மாவட்ட ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரிவுகளில் 2021 ஆம் ஆண்டு ஒதுக்கீடு செய்யப்பட்ட அனைத்து அபிவிருத்தி வேலைத்திட்டங்களும் நூறு வீதமாக பூர்த்தி செய்யப்பட்டதுடன் கிடைக்கப்பெற்ற அனைத்து நிதிகளும் பயன்படுத்தப்பட்டதாக அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

பிரதேச அபிவிருத்திக்குழுக்கூட்டம் பிரதேச செயலாளர் வி.பபாகரனின் ஒருங்கிணைப்பில் ஆலையடிவேம்பு மற்றும் திருக்கோவில் தமிழ் பிரதேசங்களுக்கான அபிவிருத்தி குழு தலைவரும் அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்தி குழுவின் இணைத்தலைவருமான டபிள்யு.டி.வீரசிங்க தலைமையில் நேற்று(17) நடைபெற்றபோதே அபிவிருத்தி தொடர்பான தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டன.

இதன்போது அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசனும் பங்கேற்று அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பில் கவனம் செலுத்தினார்.

இதில் பிரதான வேலைத்திட்டங்களான வீதி அபிவிருத்தி வீடு புனரமைப்பு சுகாதார மேம்பாடு வாழ்வாதார வேலைத்திட்டமான ஆடு வளர்ப்பு சமுர்த்தி அபிவிருத்தி திட்டங்கள் என 589 வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் இதற்காக ஒதுக்கப்பட்ட சுமார் 156 மில்லியன் ரூபாவும் 100 வீதமாக செலவு செய்யப்பட்டமையும் தெளிவுபடுத்தப்பட்டது. 

இதற்கும் மேலதிகமாக சில வேலைத்திட்டங்களும் இடம்பெற்றமை சுட்டிக்காட்டப்பட்டது.

இதேநேரம் பாராளுமன்ற உறுப்பினர்களான டபிள்யு.டி.வீரசிங்க த.கலையரசன் உள்ளிட்டவர்களின் ஒதுக்கீடுகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்களும் வெளியிடப்பட்டன.

இதன் பின்னராக திணைக்களங்கள் ரீதியாக எதிர்காலத்தில் முன்னெடுக்க வேண்டிய முன்மொழிவு வேலைத்திட்டங்களும் நிதி ஒதுக்கீடுகளுடன் சமர்ப்பிக்கப்பட்டன.

இதில் விவசாய பாதைகள் மற்றும் நீர்ப்பாசன அபிவிருத்தி குடிநீர் திட்டம் தொடர்பாகவும் அதிக கவனம் செலுத்தப்பட்டது.

அத்தோடு யானை பிரச்சினை குடிநீர்ப்பிரச்சினை பிரதேச சபை தொடர்பான சில பிரச்சினைகளுக்கும் தீர்வு பெற்றுக்கொடுக்க முயற்சிப்பதாக பாராளுமன்;ற உறுப்பினர்களான டபிள்யு.டி.வீரசிங்க த.கலையரசன் ஆகியோர் இணக்கம் தெரிவித்தனர்.

இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களின் இணைப்பாளர்கள் பிரதேச செயலக உயர் அதிகாரிகள் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் சமூக அமைப்புக்கள் மற்றும் பாடாசாலை அதிபர்கள் சுகாதார உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
(வி.சுகிர்தகுமார்)