கிழக்கில் 55 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கி வைப்பு!!


கிழக்கு மாகாணத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறைக்குத் தீர்வு வழங்கும் நோக்கில் முதல் கட்டமாக 55 பட்டதாரிகளுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களால் திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரியில் நேற்று (23/05/2023) ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டது.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மூலம் போக்குவரத்து கட்டணங்கள் மிகவும் அதிகரித்து உள்ளன. 

இதனால் நியமனம் வழங்கப்பட்டுள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு அவர்களின் நலன்கருதி தமது இருப்பிடங்களுக்கு அருகாமையிலுள்ள பாடசாலைகளில் வெற்றிடங்கள் இருக்குமானால் அப்பாடசாலைகளில் கடமைக்கு அமர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், நியமனம் பெற்றுள்ள ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் எதிர்வரும் ஓராண்டில் 10 பட்டதாரி ஆசிரியர்களை உருவாக்கும் வகையில் அர்ப்பணிப்புடன் செயலாற்ற வேண்டும் என்றும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் விமலவீர திசாநாயக்க, ஆளுநரின் செயலாளர் மற்றும் அரச உத்தியோகஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.