மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட திராய்மடு பனிச்சையடியில் அமைக்கப்பட்டுள்ள சுவிஸ் உதயம் அமைப்பின் தலைமைக்காரியாலய கட்டிட திறப்பு விழா இன்று நடைபெற்றது.
கிழக்கு மாகாணத்தில் மாணவர்களின் கல்விமேம்பாடு மற்றும் வாழ்வாதார மேம்பாட்டினை மேற்கொண்டு சுனாமி அனர்த்ததின் பின்னரான காலம் தொடக்கம் பல்வேறு சமூக பணியை கிழக்கில் சுவிஸ் உதயம் முன்னெடுத்துவருகின்றது.
புலம்பெயர் மக்களைக்கொண்ட சுவிஸ் உதயம் தாய்ச்சங்கம் மற்றும் கிழக்கு மாகாணத்தை தளமாகக்கொண்டு கிழக்கு மாகாணத்திலும் சுவிஸ் உதயம் செயற்பட்டுவருகின்றது.
கிழக்கு மாகாணத்தின் தமது சேவையினை விஸ்தரிக்கும் வகையில் சுமார் இரண்டரை கோடி ரூபா செலவில் குறித்த கட்டிடத்தொகுதி அமைக்கப்பட்டுள்ளது.
இதன் திறப்பு விழா சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்கு மாகாண தலைவர் மு.விமலநாதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சுவிஸ் உதயம் தாய்ச்சங்கத்தின் தலைவர் டி.எல்.சுதர்ஷன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். சுவிஸ் உதயம் அமைப்பின் தாய்ச்சங்க பொருளாளர் துரைநாயகம், செயலாளர் ராஜன் அம்பலவாணர் ஆகியோர் சிறப்பு அதிதிகளாவும் கலந்தகொண்டனர்.
இந்த நிகழ்வில் விசேட அதிதிகளாக மட்டக்களப்பு மாநகரசபையின் முன்னாள் முதல்வர் தி.சரவணபவன்,கிழக்கு மாகாணசபையின் முன்னாள் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார்,கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் இரா.துரைரெட்னம் மற்றும் அமைப்பின் உறுப்பினர்கள்,பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது காரைதீவினை சேர்ந்த விளையாட்டுக்கழகம் ஒன்றிற்றான சீருடைக்கான நிதியுதவியும் வழங்கிவைக்கப்பட்டது.