நாட்டில் மது பாவனை குறைந்துள்ள போதிலும் கலால் திணைக்களத்தின் வருமானம் அபரிமிதமாக அதிகரித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
மதுபான போத்தல்களுக்கு பாதுகாப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டதை அடுத்து வருமானம் அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜனவரி 3ஆம் திகதி முதல் நாட்டில் உரிமம் பெற்ற மதுபான உற்பத்தி நிலையங்கள் பாதுகாப்பு ஸ்டிக்கர்களை ஒட்டுவது அல்லது மதுபான போத்தல்கள் மற்றும் கேன்களில் டிஜிட்டல் பாதுகாப்பு முத்திரைகள் ஒட்டும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கலால் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
மதுபான போத்தல்கள் மற்றும் கேன்களில் மொத்த விற்பனைக் நிலையங்கள் மற்றும் சேமிப்புக் கிடங்குகள் மற்றும் மதுபானம் விற்பனை செய்யும் உரிமம் பெற்ற சில்லறை விற்பனை நிலையங்களிலும் ஸ்டிக்கர்கள் ஒட்டப்படுகின்றன.
ஜனவரி 1 ஆம் திகதி முதல் சந்தையில் உள்ள அனைத்து மதுபான போத்தல்கள் மற்றும் கேன்களில் ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு சட்ட விதிகளுக்கு மூன்று மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மதுபானங்கள் மீது விதிக்கப்படும் வரிகளை அரசாங்கம் எவ்வித முரண்பாடுகளும் இன்றி வசூலிக்க முடியும் என்பதை உறுதிப்படுத்துவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
அதன்படி, ஸ்டிக்கர் அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, திணைக்களம் தனது வருமானத்தை அதிகரிக்க முடிந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
2021 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், ஆண்டின் முதல் 10 மாதங்களில், வருமானம் 20 வீதத்தால் அதிகரித்துள்ளது.
தரவுகளின்படி, பல்வேறு காரணங்களால் மது தேவை சுமார் 30 வீதத்தால் குறைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
