மரணமான இலங்கையின் பிரபல கலைஞருக்கு மட்டக்களப்பில் அஞ்சலி


கொழும்பில் அண்மையில் மரணமடைந்த இலங்கையின் புகழ்பெற்ற கலைஞர் தர்மராஜ் தர்சனுக்கு நேற்று(06) மாலை மட்டக்களப்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கலைஞர்கள் இணைந்து இந்த அஞ்சலி நிகழ்வினை ஏற்பாடுசெய்திருந்தனர்.

மட்டக்களப்பு,லொயிட்ஸ் அவனியுவில் உள்ள ராவணா ஸ்டூடியோ மண்டபத்தில் திரைப்படக்கலைஞர் ஜனா தலைமையில் நடைபெற்றது.

இதன்போது கலைஞர் தர்மராஜ் தர்சனின் உருவப்படத்திற்கு ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன் அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து கலைஞர்களினால் நினைவுரைகள் நிகழ்த்தப்பட்டதுடன் கலைஞர் தர்மராஜ் தர்சன் தொடர்பான நினைவுகளும் கருத்துப்பரிமாற்றங்கள் செய்யப்பட்டன.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பாகங்களிலும் உள்ள கலைஞர்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.