உலக வங்கியின் “உள்ளூர் அபிவிருத்தி உதவிச் செயற்திட்டத்தின் (LDSP PT-1)” பங்களிப்புடன் புனரமைப்புச் செய்யப்பட்ட மட்டக்களப்பு மாநகர சபையின் பொதுச் சந்தைக்கான இறைச்சி மற்றும் மீன் விற்பனை பிரிவானது இன்று (04) மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் தியாகராஜா சரவணபவன் அவர்களால் பொது மக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாநகரசபை சந்தை கட்டடத்தில் குறித்த விற்பனை நிலயங்கள் மிக நீண்ட காலமாக மேல்த்தளத்தில் இயங்கி வந்த நிலையில் மேல்த்தளத்திற்கு சென்று மீன் மற்றும் இறைச்சியை கொள்வனவு செய்வதில் நுகர்வோர் எதிர்கொண்ட சிக்கல் நிலைமையினை கருத்தில் கொண்டு குறிப்பாக மாற்றுத் திறனாளிகள் மற்றும் வயது முதிர்ந்தவர்கள் முதல் தளத்திற்கு சென்று கொள்வனவு செய்ய முடியாத நிலைமை காணப்பட்டதால் வியாபாரிகளின் வியாபாரமும் பாதிக்கப்பட்டு காணப்பட்டது .
இந்நிலையினை கருத்தில் கொண்டு மட்டக்களப்பு மாநகரசபையினால் உலக வங்கியின் “உள்ளூர் அபிவிருத்தி உதவிச் செயற்திட்டத்தின் (LDSP PT-1)” பங்களிப்புடன் புனரமைப்புச் செய்யப்பட்டு கீழ்த் தளத்துக்கு மாற்றப்பட்ட மீன் மற்றும் இறைச்சி விற்பனை நிலையங்கள் இன்று பொதுமக்கள் பாவனைக்காக வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் தியாகராஜா சரவணபவன் மற்றும் மாநகர பிரதி முதல்வர் சத்தியசீலன், மாநகரசபை உறுப்பினர்கள், மாநகர ஆணையாளர், உத்தியோகஸ்த்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.