மட்டக்களப்பை வந்தடைந்த இந்திய நிவாரணப் பொருட்கள்!!


இந்தியாவின் தமிழ்நாடு அரசாங்கம் இலங்கை மக்களுக்கு வழங்கியுள்ள நிவாரணப் பொருட்களில் ஒரு தொகுதி நிவாரணப் பொருட்கள் இன்று (03) திகதி மட்டக்களப்பை வந்தடைந்தது.

கொழும்பிலிருந்து புகையிரதம் மூலம் எடுத்துவரப்பட்ட நிவாரணப் பொருட்களை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் பொறுப்பேற்றுக்கொண்டார்.

இதன்போது மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி சிறீகாந்த், புகையிரத நிலைய பிரதம அதிபர் எஸ்.பேரின்பராசா உட்பட அதிகாரிகள் பலரும் சமுகமளித்திருந்தனர்.

இம்மாவட்டத்திற்கு 50000 பக்கட் அரிசி மற்றும் 3750 பக்கட் பால்மா என்பன பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் இதன்போது தெரிவித்ததுடன், மட்டக்களப்பு மாவட்ட மக்கள் சார்பாக இந்திய அரசாங்கத்திற்கு நன்றியினையும் தெரிவித்திருந்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலகப் பிரிவிற்கும் குறித்த நிவாரணப் பொருட்கள் பகிர்ந்தளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.