பொத்துவில் சைக்கிளோட்ட வீரருக்கு மட்டக்களப்பில் மகத்தான வரவேற்பு...!!


இன ஐக்கியத்தை வலியுறுத்தி நாடு தழுவிய சைக்கிளோட்டத்தை முன்னெடுத்துள்ள அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில் பகுதியை சேர்ந்த‌ 42 வயதுடைய கலந்தர் சுல்பிகார் புதன்கிழமை 16.02.2022 மட்டக்களப்பு நகரை வந்தடைந்தார். இதன்போது சைக்கிளோட்ட வீரருக்கு மட்டக்களப்பில் மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது.

இலங்கை திருநாட்டின் 74வ‌து சுத‌ந்திர‌ தின‌த்தை முன்னிட்டு இன‌ங்க‌ளுக்கிடையில் ஐக்கிய‌த்தை வ‌லியுறுத்தி நாடு முழுவ‌தும் த‌னிந‌ப‌ராக‌ 1407 கிலோமீட்ட‌ர் சைக்கிள் சவாரியை இவர் கொழும்பு சுத‌ந்திர‌ ச‌துக்க‌த்திலிருந்து கடந்த சனிக்கிழமை ஆர‌ம்பித்திருந்தார்.




குறித்த ஆரம்ப நிகழ்வில் ச‌ர்வ‌ம‌த‌ த‌லைவ‌ர்க‌ளின் ஆசீர்வாத‌த்துட‌ன் சைக்கிள் சவாரி ஆரம்பமாகி கொழும்பிலிருந்து யாழ்ப்பாண‌ம், கிளிநொச்சி, திருகோண‌ம‌லை, மட்டக்களப்பு, க‌ல்முனை,பொத்துவில், ஹ‌ம்பாந்தோட்டை ஊடாக‌ கொழும்பை சென்றடையவுள்ளார்.

நான்காவது நாளான நேற்று குறித்த சைக்கிளோட்ட வீரர் மட்டக்களப்பு திருகோணமலை பிரதான வீதி ஊடாக வருகைதந்துபோது மட்டக்களப்பு நகர் பகுதியில் வைத்து இந்த மகத்தான பாராட்டும் கௌரவமும் வழங்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டுத்துறை உத்தியோகத்தர் வி, ஈஸ்வரன் தலைமையிலான விளையாட்டுத்துறை உத்தியோகத்தர்களினால் வரவேற்கும் நிகழ்வு மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக நடைபெற்றது .

இந்நிகழ்வில் விளையாட்டுத்துறை உத்தியோகத்தர்கள், மட்டக்களப்பு வர்த்தக சங்க உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு வரவேற்பு அளிக்கப்பட்டதுடன் தொடர்ந்து கொழும்பில் நிறைவு செய்யவுள்ள பயணத்திற்கு வழியனுப்பி வைத்தனர்.