கொக்கட்டிச்சோலை படுகொலையின் 34ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு...!!


மட்டக்களப்பு- கொக்கட்டிச்சோலை படுகொலையின் 34ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு இன்று இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்டம் கொக்கட்டிச்சோலையில் 1987ஆம் ஆண்டு இறால் பண்ணையில் பணி புரிந்தவர்களையும் அகதியாக இடம் பெயர்ந்து அடைக்கலம் புகுந்திருந்த அப்பாவி பொது மக்கள் உட்பட 150 க்கும் மேற்பட்டவர்களை இலங்கை இராணுவத்தினர் படுகொலை செய்தனர்.

குறித்த படுகொலை நடந்த இடத்தில் கொல்லப்பட்ட மக்களின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவுத் தூபியினை 2006 ஆம் ஆண்டு இலங்கை இராணுவம் இடித்தழித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனால் இறந்தவர்களின் உறவுகளும் பொதுமக்களும் இறந்தவர்களை நினைவு கூர்ந்து அஞ்சலிக்க முடியாத நிலை காணப்பட்டது.

இடித்தழிக்கப்பட்ட தூபியினை ரெலோ இயக்கத்தின் செயலாளர் நாயகமும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கோ.கருணாகரம்(ஜனா) அவர்கள் தனது சொந்த நிதியினை செலவழித்து மீளவும் புனரமைப்பு செய்து மக்களின் பாவனைக்கு கையளித்திருந்தார்.

இதன்படி இன்று குறித்த தூபியில் பொலீசார் மற்றும் புலனாய்வாளர்களின் கெடுபிடிகள் மற்றும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் ரெலோவின் செயலாளர் நாயகம் கோ.கருணாகரம்(ஜனா) ரெலோவின் உப தலைவர் நி.இந்திரகுமார்(பிரசன்னா) ரெலோவின் நிதிச் செயலாளர் ந.விந்தன் கனகரட்ணம் ஆகியோர் மரணித்த மக்களை நினைவு கூர்ந்து தூபியில் சுடர் ஏற்றி,மலர் தூபி அஞ்சலி செலுத்தினர்.