மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் விவசாயிகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டங்கள்

மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள் பசளையின்றி சிரமங்களை எதிர்நோக்கியுள்ள நிலையில் மட்டக்களப்பில் உள்ள இராஜாங்க அமைச்சரும்,மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரும் மௌனமாகயிருப்பதாகவும் தங்களுக்கான பசளையினைப்பெற்றுக்கொள்ள அனைவரும் நடவடிக்கையெடுக்கவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் பசளை விடயம் தொடர்பில் அவர்களின் தற்காலப் பிரச்சினைக்குத் தீர்வு கோரி மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.


“உரம் இன்றி உழவு இல்லை”விவசாயிகளின் தற்கால பிரச்சினைக்கு தீர்வுகோரி கண்டனப்போராட்டம் மட்டக்களப்பில் இன்று முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி, கொக்கட்டிச்சோலை, ஆயித்தியமலை, வந்தாறுமூலை,கிரான் ஆகிய பகுதிகளில் உள்ள கமநல அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக இந்த போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

விவசாயிகளுடன் இணைந்து தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்த கண்டன போராட்டத்தினை மட்டக்களப்பு மாவட்டம் முழுவதும் முன்னெடுத்துவருகின்றது.

உரமின்றி உழவர் நிலம் இல்லை உடனே உரத்தைத் தா, விவசாயிகளின் வாழ்க்கையில் விளையாடாதே அரசே, சேதனைப் பசளை பிரவேசத்தால் விளைச்சல் குறைந்தால் நட்டஈடு தருவாயா அரசே?, முடக்காதே முடக்காதே எமது விவசாயத்தினை முடக்காதே,அழிக்காதே அழிக்காதே எமது பொருளாதாரத்தினை அழிக்காதே,திடீர் சேதனம் விவசாயத்தினை முடக்கும் போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை கண்டன போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஏந்தியிருந்தனர்.

விவசாயத்திற்கு சேதனைப்பசளை முக்கியம்தான் என்றாலும் அதனை உடனடியாக செய்யமுடியாது என தெரிவித்த விவசாயிகள் படிப்படியாகவே அவற்றினை செய்யமுடியும் எனவும் ஆனால் அரசாங்கம் முழுமையாக பசளையினை முடக்கியதாகது விவசாயிகளை கடுமையாக பாதித்துள்ளதாகவும் விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.

கடந்த காலத்தில் 1000ரூபாவுக்கு பெற்றுக்கொள்ளப்பட்ட பசளை இன்று பத்தாயிரம் ரூபாவுக்கு பெறுவது கடினமான சூழ்நிலை காணப்படுவதாகவும் இது விவசாயத்தில் கடுமையான பாதிப்புகளை விவசாயிகளுக்கு ஏற்படுத்தும் எனவும் இங்கு விவசாயிகள் சுட்டிக்காட்டினார்கள்.

விவசாய செய்கையில்ஈடுபடுவோருக்கு வாழ்வாதாரத்தினால் பல்வேறு பொருட்களினதும் கூலியும் அதிகரித்துள்ள நிலையில் பசளையினையும் தடைசெய்துள்ளதானது பாரிய சவால் எனவும் இதனை நிவர்த்திக்க உடனடியாக விவசாயிகளுக்கு பசளை வழங்க அரசாங்கம் நடவடிக்கையெடுக்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

அண்மையில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தன் சேதனப்பசளை இந்த மண்ணுக்கு பொருத்தமானது என கூறியுள்ளார்.அவர் எங்காவது இரண்டு ஏக்கர் காணியைப்பெற்று சேதனப்பசளை மூலம் ஒரு ஏக்கருக்கு 40மூடை அறுவடையினைப்பெறுவாரானால் நான் இந்த அரசியலிலிருந்து ஒதுங்குவேண் என வெல்லாவெளி பிரதேசசபை உறுப்பினர் தியாகராஜா இந்த ஆர்ப்பாட்டத்தின்போது சவால் விடுத்துள்ளார்.

காலை 8.00 மணி தொடக்கம் பகல் 12.30 மணி வரையில் முன்னெடுக்கப்பட்ட இந்த போராட்டத்தில் விவசாயிகள்,அரசியல்வாதிகள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.