இலஞ்சம்பெற்ற மட்டக்களப்பு பொலிஸ் நிலைய 03போக்குவரத்து பொலிஸார் தற்காலிக பணி நீக்கம்


மட்டக்களப்பில் சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாது முச்சக்கரவண்டி செலுத்திச் சென்றவரிடம் 5 ஆயிரம் ரூபா இலஞ்சமாக பெற்ற மட்டு தலைமையக பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவில் கடமையாற்றிவரும் 3 பேர் நேற்றிரவு முதல் தற்காலிகமாக கடமையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பில் இருந்து செங்கலடி பிரதேசத்திற்கு முகத்துவாரம் வீதி ஊடாக முச்சக்கரவண்டியில் நேற்று மாலை 5.30 மணியளவில் குறித்த முச்சக்கரவண்டி பயணித்துள்ள நிலையில் அங்கு வீதிச் சோதனை நடவடிக்கை ஈட்டிருந்த போக்குவரத்து பொலிஸார் முச்சக்கரவண்டியை நிறுத்தி சோதனையிட்டுள்ளனர்.

இதன்போது முச்சக்கரவண்டியை செலுத்திய சாரதியிடம், சாரதி அனுமதிப் பத்திரம் இருக்கவில்லை.

இதனையடுத்து சாரதி அனுமதிப்பத்திரமின்றி செலுத்திய குற்றச்சாட்டில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போவதாகவும் அதனை செய்யாது அங்கிருந்து விடுவிக்க 10 ஆயிரம் ரூபா இலஞ்சமாக தருமாறும் குறித்த முச்சக்கரவண்டி சாரதியிடம் போக்குவரத்து பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து 5 ஆயிரம் ரூபாய்தான் இருக்கின்றது என 5 ஆயிரம் ரூபாவை போக்குவரத்து பொலிசாருக்கு இலஞ்சமாக கொடுத்து விட்டு அங்கிருந்து புறப்பட்ட குறித்த முச்சக்கரவண்டி சாரதி உடனடியாக மட்டு தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு சென்று தன்னிடம் 5 ஆயிரம் ரூபா இலஞ்சமாக போக்குவரத்து பொலிசார் பெற்றுள்ளதாக முறைப்பாடு செய்துள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக கிழக்கு பிராந்திய சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலில் உடனடியாக பொலிஸ் அத்தியட்சகர் குமாரசிறி தலைமையில் விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் குறித்த போக்குவரத்து பிரிவில் கடமையாற்றி வந்த 3 பொலிஸாரையும் உடன் அமுலுக்கு வரும் வரையில் நேற்று உடனடியாக கடமையில் இருந்து இடைநிறுத்தியுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.