விடுதலைப்புலிகளின் தலைமையகம் இருந்த காணி தனியாரிடம் ஒப்படைப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் விடுதலைப்புலிகளின் தலைமையகங்களில் ஒன்றாக கருதப்படும் கொக்கட்டிச்சோலை சோலையகம் காணி உரிமையாளரிடம் கையளிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு,பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சோலையகம் படைமுகாமிருந்த சுமார் இரண்டு ஏக்கர் காணியையே இவ்வாறு கையளிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் முன்னெடுத்த நடவடிக்கைகள் பயணாக இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இன்று அப்பகுதிக்கு விஜயம் செய்த இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் இது தொடர்பில் இராணுவ அதிகாரிகளுடன் கலந்துரையாடியதுடன் குறித்த காணியை விரைவாக உரியவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த காணியானது விடுதலைப்புலிகள் காலத்தில் புலிகளின் தலைமையகங்களுல் ஒன்றாக இருந்ததுடன் கிழக்கு இராணுவத்தினரால் மீட்கப்பட்டதன் பின்னர் இராணுவத்தின் முகாமாக இருந்துவந்த நிலையில் இன்று அக்காணியை உரிமையாளரிடம் வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த சந்திப்பில் 231படைப்பிரிவின் கொக்கட்டிச்சோலை முகாம் பொறுப்பதிகாரி லெப்டினன் கேணல் ஹர்சன குணரெட்ன உட்பட பலர் கலந்துகொண்டனர்.

2007ஆம் ஆண்டு வரையில் விடுதலைப்புலிகளின் கிழக்கு மாகாணத்தின் முக்கிய நிர்வாகத்தளமாக சோலையகம் இருந்த நிலையில் கிழக்கில் படையினர் காலூண்றிய நிலையில் அது இராணுவமுகாமாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.