பெரியகல்லாறு அருள்மிகு ஸ்ரீசர்வார்த்த சித்திவிநாயகர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் ஆரம்பம்


கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு பெரியகல்லாறு அருள்மிகு ஸ்ரீசர்வார்த்த சித்திவிநாயகர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

மட்டு. மாநகரின் தெற்கே 30 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ளதுதான் பெரியகல்லாறு என்னும் பழம்பெரும் கிராமம். மட்டக்களப்பிற்கு பெருமை சேர்க்கும் நீண்ட வாவியின் அருகே கல்முனை மட்டக்களப்பு பிரதான வீதிக்கருகே அமையப் பெற்றதுதான் 400 ஆண்டுகளுக்கு மேல் பழைமை வாய்ந்த ஸ்ரீ சர்வார்த்த சித்தி விநாயகர் ஆலயம்.

இன்று காலை பெரியகல்லாறு கடல்hநச்சியம்மன் ஆலயத்தில் இருந்து கொடிச்சீலை எடுத்துவரப்பட்டு ஆலயத்தில் துவஜாரோகண கிரியைகள் ஆரம்பமானது.

இதன்போது வசந்த மண்டபத்தில் எழுந்தருளியுள்ள விநாயகப்பெருமானுக்கும் விசேட பூஜைகள் நடைபெற்று கொடிச்சீலைக்கும் பூஜைகள் நடைபெற்றதை தொடர்ந்து சுவாமி மற்றும் கொடி என்பன வீதியுலா கொண்டுவரப்பட்டு கொடித்தம்பம் அருகே விசேட பூஜைகள் நடைபெற்றன.

அதனை தொடர்ந்து கொடித்தம்பத்தில் விசேட பூஜைகள் நடைபெற்று,வேத,தாள,மேள இசைகள் முழங்கள் பக்தர்களின் அரோகரா கோசத்துடன் கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது.

கொடியேற்றத்தினை தொடர்ந்து தம்பத்திற்கு விசேட அபிசேக மற்றும் விசேட பூஜை நடைபெற்றதை தொடர்ந்து பக்தர்களுக்கு ஆசி வழங்கப்பட்டு சுவாமி உள்வீதியுலா நடைபெற்றது.

15தினங்கள் நடைபெறவுள்ள ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தில் எதிர்வரும் 27ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் தோரோட்டம் நடைபெறவுள்ளதுடன் மறுதினம் ஞாயிற்றுக்கிழமை தீர்த்தோற்சவம் நடைபெறவுள்ளது.