மட்டக்களப்பு மாவட்டத்தில் எல்லைப்பகுதியான மயிலந்தனை,மயிலத்தமடு பகுதியில் நடைபெறும் அத்துமீறல்கள் தொடர்பில் தற்போது முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதன் காரணமாக தற்போதுள்ள முரண்பாடுகள் விரிவடையாமல் இருப்பதற்கு ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையினை துரிதப்படுத்தி விரைவான தீர்மானத்தினை எடுக்க மாவட்ட அபிவிருத்திக்குழு தீர்மானித்துள்ளதாக மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத்தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் இணைத்தலைவர்களான பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன்,கிழக்கு மாகாண ஆளுனர் அனுராதா ஜயம்பத் தலைமையில் இன்று நடைபெற்றது.
இன்றைய கூட்டத்தில் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சந்திரகாந்தன் பலத்த பாதுகாப்புடன் மாவட்ட செயலகத்தில் அபிவிருத்திக்குழு கூட்டத்தில் கலந்துகொண்டார்.
இந்த கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன்,மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியம்,கோவிந்தன் கருணாகரம்,கிழக்கு மாகாணசபையின் பிரதம செயலாளர் துஷித பி விஜயசிங்க,மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் க.கருணாகரன்,மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது கூட்ட ஆரம்பத்தில் மாவட்ட அரசாங்க அதிபரின் வரவேற்பு உரையுடன் கிழக்கு மாகாண ஆளுனர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தனின் தலைமை உரைகளுடன் கூட்டம் ஆரம்பமானது.
கூட்ட ஆரம்பத்தில் கடந்த கால செயற்பாடுகள் மற்றும் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் தெளிவுபடுத்த முற்பட்டபோது குறுக்கிட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்,மட்டக்களப்பு மாவட்டத்தில் நெருப்பாகவுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வினைக்கண்ட பின்னர் ஏனைய பிரச்சினைகள் தொடர்பில் கதைக்கலாம் என தெரிவித்ததை தொடர்ந்து அங்கு பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் நடைபெற்றன.
குறிப்பாக மயிலத்தமடு,மாதவனை பகுதியில் முன்னெடுக்கப்படும் அத்துமீறிய பயிர்ச்செய்கை காரணமாக அங்கு கால்நடைவளர்ப்போர் பாதிப்புகளை எதிர்நோக்குவதுடன் எதிர்காலத்தில் இரண்டு சமூகங்களிடையே வேறு விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் இங்கு பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் சுட்டிக்காட்டினார்.
இதன்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம்,தீர்மானம் எடுக்கும் பிரச்சினைகளை முதலில் கலந்துரையாடி தீர்மானத்தினை எடுத்துவிட்டு ஏனைய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவோம் என தெரிவிக்கப்பட்டது.
எனினும் நிகழ்ச்சி நிரலின்படி சென்று அனைத்து பிரச்சினைகளும் கலந்துரையாடப்படும் எனவே நிகழ்ச்சி நிரலை தொடர்ந்து செல்லுமாறு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சந்திரகாந்தனால் பணிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து கடந்த காலத்தில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் தொடர்பிலும் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் குறித்தும் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இம்மாவட்டத்தில் மத்திய அரசு மாகாண சபை மற்றும் உள் நாட்டு வெளிநாட்டு அரசசார்பற்ற நிருவணங்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்கள்இ முந்தனை ஆற்றுப்படுக்கை அபிவிருத்தித்திட்டம் விவசாய மற்றும் நீர்ப்பாசன திட்டங்கள் ஐரோட் திட்டங்கள் உருகாமம் கித்துள் குளங்களின் அபிவிருத்தித் திட்டங்கள் அவற்றின் கொள்ளலவினை 90 எம்.சீ.எம். ஆக உயர்த்துவது தொடர்பான பல விடயங்கள் ஆராயப்பட்டு தீர்மானங்கள் எட்டப்பட்டுள்ளன.
அதனை தொடர்ந்து மயிலத்தமடு,மாதவனை பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.இது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் கடுமையான வாதங்களை முன்வைத்தனர்.
மயிலத்தமடு,மாதவனை பகுதியில் சட்ட விரோதமான முறையில் சிலர் காணிகளில் சோளன் செய்கை மேற்கொள்வதாகவும் இதன் காரணமாக அப்பகுதியில் முரண்பாடுகள் இரு சமூகங்களுக்குள் ஏற்படும் நிலையுள்ளதாகவும் இங்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களினால் சுட்டிக்காட்டப்பட்டது.
2010ஆம் ஆண்டு தற்போதைய அபிவிருத்திக்குழுவின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சராகயிருந்த சந்திரகாந்தனின் காலப்பகுதியிலேயே குறித்த பகுதி தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு அதற்கான குழு அமைக்கப்பட்டு குறித்த பகுதியை கால்நடை மேய்ச்சல் காணியாக வர்த்தமானிப்படுத்த பரிந்துரைசெய்யப்பட்ட காணிக்குள்ளேயே தற்போது சேனைப்பயிர்ச்செய்கை செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக இங்கு பாராளுமன்ற உறுப்பினர் கருணாகரமால் தெரிவிக்கப்பட்டது.
எனினும் குறித்த பகுதியில் தேசிய கொள்கைகளுக்கு அமைவாகவே சோளன் செய்கை மேற்கொள்ளப்படுவதாகவும் அது ஒரு தேசிய நிகழ்ச்சி திட்டத்தில் முன்னெடுனக்கப்படுவதாகவும் இங்கு கிழக்கு மாகாண ஆளுனரினால் சுட்டிக்காட்டப்பட்டது.
எனினும் கால்நடை வளர்ப்போர் மாடுகளை மேய்க்கும் இடங்களில் அத்துமீறி இந்த வேலைத்திட்டங்கள் முன்னெடுப்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது எனவும் இதனை ஒரு திட்டமிட்ட காணி அபகரிப்பு செயற்பாடகவும் சட்ட விரோத செயற்பாடாகவும் காணப்படுவதனால் இதனை தடுத்து நிறுத்துவதற்கு மாவட்ட அபிவிருத்திக்குழு நடவடிக்கையெடுக்கவேண்டும் என இங்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
குறித்த பகுதியில் சட்ட விரோத செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றது,அதனை உரிய தரப்பினர் தடுத்து நிறுத்தவேண்டும் என மாவட்ட அபிவிருத்திக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றுமாறு பாராளுமன்ற உறுப்பினரால் கோரப்பட்டது.
இதன்போது பல்வேறு வாதப்பிரதிவாதிகள் நடைபெற்றபோதிலும் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரினால் எல்லைப்பகுதியில் நடைபெறும் அத்துமீறல்கள் தொடர்பில் தற்போது முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதன் காரணமாக தற்போதுள்ள முரண்பாடுகள் விரிவடையாமல் இருப்பதற்கு 02ஆம் திகத கூட்டம் நடாத்துவதாக ஏற்பாடுசெய்யப்பட்டு நிறுத்தப்பட்டுள்ள ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையினை துரிதப்படுத்தி விரைவான தீர்மானத்தினை எடுப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.