19வது திருத்த சட்டம் தமிழ் மக்களுக்கு எந்த நன்மையினையும் கொடுக்கவில்லை –பிரசாந்தன்


19வது திருத்த சட்டம் தமிழ் மக்களுக்கு எந்த நன்மையினையும் பெற்றுக்கொடுக்காத நிலையில் 20வது திருத்த சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்தார்.

ஜனாதிபதி கோத்தபாயவின் ஒருஇலட்சம் இளைஞர் யுவதிகளுக்கு அரச வேலைவாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுக்கும் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்டவர்களுக்கான முதல் கட்ட நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று காலை நடைபெற்றது.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திகாந்தனின் வேண்டுகோளின் அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்ட 50பேருக்கு இன்று நியமனங்கள் முதல் கட்டமாக வழங்கிவைக்கப்பட்டன.

கொரனா அச்சுறுத்தல் காரணமாக குறிப்பிட்ட தொகையினர் மட்டும் அனுமதிக்கப்பட்டு இந்த நிகழ்வு நடைபெற்றது.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கட்சியின் பொருளாளர் ஆ.தேவராஜன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

சாதாரணதரம் சித்திபெறாதவர்கள் அரச தொழில்வாய்ப்பினைப்பெற்றுக்கொள்ளும் வகையில் ஜனாதிபதியினால் கொண்டுவரப்பட்ட இந்த திட்டத்தின் ஊடாக கிராமமப்புறத்தல் தொழில்வாய்ப்பற்ற இளைஞர் யுவதிகள் நன்மையடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

கடந்தவாரம் பல சர்ச்சைகளுக்கு மத்தியில் 20வது திருத்த சட்டம் மூன்pல் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. 19ஆவது திருத்தச்சட்டம் சரியானது,அதைக் கொண்டுவரவேண்டும் என பலர் குரல் கொடுத்திருந்தனர். ஆனால் அது கொண்டுவரப்பட்ட பின்னர் தமிழர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பாக பல கேள்விகள் இருக்கின்றன. 19ஆவது திருத்தச்சட்டம் மூலமும் ஐக்கிய தேசியக் கட்சியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இணைந்து நடத்திய நல்லாட்சி காலத்தில் தான் உயிர்த்த ஞாயிறு படுகொலைத் தாக்குதல் நடைபெற்றது. கிழக்கு மாகாணத்தில் தமிழர்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் மறுக்கப்பட்டது, நிர்வாகம் மறுக்கப்பட்டது. இந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில்தான் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிற்றூழியர் வேலைக்குக்கூட பொலன்னறுவையிலிருந்து 381 பணியாளர்களுக்கு நியமனம் வழங்கப்பட்டது. மத்திய வங்கியில் பாரிய ஊழல் நடைபெற்றது. 

அது மாத்திரமல்ல தமிழர்களின் போராட்டத்தின்பால் கிடைத்த இலங்கையில் எழுத்து மூலமாக இருக்கின்ற ஆகக் குறைந்த அதிகாரமாக இருக்கின்ற மாகாணசபை முறைமையைக்கூட நடத்த முடியாமல் 2017,2018ஆம் ஆண்டுகளில் நடத்த வேண்டிய மாகாணசபைத் தேர்தலை நடத்த முடியாமல் இழுத்தடித்து  இன்று மாகாணசபை இல்லாமல் எந்தவிதமான பாடசாலைகளுக்கும் வைத்தியசாலைகளுக்கும் மாகாண சபையின் அதிகாரத்தின் கீழுள்ள அனைத்துத் திணைக்களங்களுக்கும் நிதி ஒதுக்க முடியாமல் அபிவிருத்தி செய்ய முடியாமல் பல இன்னல்களை எதிர்நோக்கிக் கொண்டிருப்பதற்குக் காரணம் நல்லாட்சியில் 19ஆம் திருத்தச் சட்டமூலம் நடைமுறையிலிருந்த காலத்தில் தீர்க்கமான முடிவெடுக்கப்படாமையாகும்.

19ஆவது திருத்தச்சட்டமானது தமிழர்களுக்கு எந்தவித நன்மையையும் பெற்றுக்கொடுக்கவில்லை என்ற அடிப்படையில் 20ஆவது திருத்தச்சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. கிழக்கு மாகாண மக்களுக்காக தொடர்ந்தும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி கௌரவ தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் பயணிக்க தயாராக இருக்கின்றது. எமது தமிழர்களுக்கு எதிராக எந்தவொரு முடிவு எடுக்கப்படுகின்றபோதும் நிச்சயமாக அதற் எதிராக நிற்கத் தயங்க மாட்டோம். தமிழர்களுக்கு சார்பான தமிழர்களின் நிலத்தினையும் நிர்வாகத்தினையும் பாதுகாக்கின்ற, தமிழர்களின் தனித்துவத்தை பாதுகாக்கின்ற அபிவிருத்திகளை கொண்டுவருகின்ற அனைத்து செயற்பாடுகளுக்கும் தொடர்ந்தும் கைகொடுத்து இந்த அரசாங்கத்துடன் இணக்க ஆட்சி நடத்தி எமது மக்களின் வறுமையை போக்கி அவர்களின் தனித்துவத்தை பாதுகாப்பதற்காக நாங்கள் தொடர்ந்து பயணிப்போம்.