வாழைச்சேனை வட்டார வன திணைக்களத்திற்கு உட்பட்ட வெவ்வேறு பகுதிகளில் சட்டவிரோதமான முறையில் வெட்டப்பட்ட மரங்களை கடத்திய நான்கு சந்தேக நபர்களும், சிறய உழவு இயந்திரம் மற்றும் மரங்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக வாழைச்சேனை வட்டார வன உத்தியோகத்தர் எஸ்.தணிகாசலம் தெரிவித்தார்.
வாழைச்சேனை வட்டார வன திணைக்களத்திற்கு உட்பட்ட ரிதிதென்னை பகுதியில் வாழைச்சேனை வட்டார வன உத்தியோகத்தர்கள் மேற்கொண்ட நடவடிக்கையின் போது தனியார் காணி ஒன்றில் சட்டவிரோதமான முறையில் மரங்கள் வெட்டும் பணியில் ஈடுபட்ட இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்தோடு இவர்களிடம் இருந்து வெட்டப்பட்ட ஆறு சுரியமாரை மரம், ஐந்து தேக்கு மரம் மற்றும் இரண்டு சரியமாரை மரக்குற்றிகள் மற்றும் மரம் வெட்டுவதற்கு பயன்படும் இயந்திர வால் என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும் புணாணை கோறளை ஒதுக்குக் காட்டு பகுதியில் வாழைச்சேனை வட்டார வன உத்தியோகத்தர்கள் மேற்கொண்ட நடவடிக்கையின் போது மரங்களை வெட்டி கடத்த முற்பட்ட போது இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடம் இருந்து ஆறு தேக்கு மரம், ஒரு முதுரை மரம், ஒரு திருக்கொண்டை மரம் மற்றும் மரங்கள் ஏற்றுவதற்கு பயன்படுத்திய சிறிய ரக உழவு இயந்திரம்; என்பன சுற்றிவலைப்பில் கைப்பற்றப்பட்டுள்ளதாக வன உத்தியோகத்தர் எஸ்.தணிகாசலம் தெரிவித்தார்.
வாழைச்சேனை வட்டார வன பிரிவில் சட்டவிரோத மண் அகழ்வு மற்றும் சட்டவிரோத மரம் கடத்தல் நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும், அதனை தடுப்பதற்கு தனது தலைமையில் வட்டார வன உத்தியோகத்தர்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக வாழைச்சேனை வட்டார வன உத்தியோகத்தர் எஸ்.தணிகாசலம் மேலும் தெரிவித்தார்.