தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் போரதீவுப்பற்று பிரதேசசபை உறுப்பினர்

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் போரதீவுப்பற்று பிரதேச சபை உறுப்பினர் மனோகரன் நேற்று மாலை வயல் பிரதேசத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

போரதீவுப்பற்று பிரதேச சபையின் சின்னவத்தை வட்டார உறுப்பினரான தாமோதரம் மனோகரன் எனினும்  45 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்று மாலை அவர் சங்கர்புரம் கிராமத்திலுள்ள அவரது வீட்டிலிருந்து புறப்பட்டு றாணமடு பகுதியிலுள்ள வயலுக்குச் சென்றுள்ளார். வயலுக்குச் சென்றவர் மாலை வேளையாகியும் வீடு திரும்பாததையடுத்து உறவினர்கள் வயலுக்குச் சென்று பார்த்தவேளை அவர் வீழ்ந்து கிடந்துள்ளார்.

பின்னர் உடனடியாக களுவாஞ்சிகுடி வைத்தியாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு முன்னரே அவர் உயிரிழந்துள்ளதாக,  வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மனோகரன் அவர்கள் நெஞ்சு வலி தொடர்பாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். இவர் நெஞ்சு வலி காரணமாக உயிரிழந்திருக்கலாம் என உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

சடலம் தற்போது களுவாஞ்சிகுடி பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.

தாமோதரம் மனோகரன் அவர்கள் கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் சின்னவத்தை வட்டாரத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியில் போட்டியிட்டு வெற்றிபெற்று பிரதேச சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டு, அப்பகுதி மக்களுக்குத் திறம்படச் சேவையாற்றி வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.