வாகனேரியில் சட்ட விரோதமான மண் ஏற்ற சென்றவர்களை தடுத்தவர்கள் மீது தாக்குதல்

மட்டக்களப்பு வாகனேரி பகுதியில் மண் ஏற்றுவதற்கு சென்றவர்களை தடுத்தவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர்களில் காயமடைந்தவர்கள் வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வாகனேரி குளம் பகுதியில் ஓட்டமாவடியை சேர்ந்தவர்களினால் தொடர்ச்சியாக சட்ட விரோதமான முறையில் மேற்கொள்ளப்பட்டுவரும் மண் அகழ்வுகள் குறித்து இப்பகுதியை சேர்ந்த தமிழ் மக்களினால் பல்வேறு தடவைகள் ஆர்ப்பாட்டங்கள் நடாத்தப்பட்டு உரிய தரப்பினருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் அப்பகுதிகளில் தொடர்ச்சியான மண் அகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் இன்று மாலை அப்பகுதிக்கு மண் அகழ்வுக்கு சென்றவர்கள் அப்பகுதியை சேர்ந்தவர்களினால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.

இதன்போது மண் அகழ்வுக்கு சென்றவர்களினால் அப்பகுதியை சேர்ந்தவர்கள் மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து ஓட்டமாவடியை சேர்ந்தவர்கள் மேலும் ஒரு உழவு இயந்திரத்தில்வந்து அப்பகுதி மக்கள் மீது தாக்குதல் நடாத்தியுள்ளனர்.
இதன்போது சம்பவம் நடந்த பகுதிக்கு சென்ற கிராம அபிவிருத்தி சங்க தலைவரும் குறித்த குழுவினரால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளதாகவும் அப்பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதல்கள் காரணமாக பெண் ஒருவர் உட்பட ஆறு பேர் படுகாயமடைந்து வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஓருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இது தொடர்பில் வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று சந்தித்த மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன்,இது தொடர்பில் வாழைச்சேனை –ஏறாவூர் பிராந்தியத்திற்கான உதவி பொலிஸ் அத்தியட்சகரை தொடர்புகொண்டு குறித்த பிரச்சினை தொடர்பில் முறையிட்டதாகவும் தெரிவித்தார்.

இது தொடர்பில் ஏறாவூரில் இருந்து விசேட பொலிஸ் குழுவொன்று வாகனேரிக்கு அனுப்பப்பட்டு அது தொடர்பில் சிலர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பான விசாரணைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவித்ததாகவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் தெரிவித்தார்.

குறித்த பகுதியில் ஓட்டமாவடியை சேர்ந்த முஸ்லிம்களினால் முன்னெடுக்கப்படும் சட்ட விரோத மண் அகழ்வு குறித்த பல தடவைகள் வாழைச்சேனை பொலிஸாருக்கு அறிவித்தும் எதுவித நடவடிக்கையும் இதுவரையில் எடுக்கவில்லையெனவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.