இராணுவத்தின் உதவியுடன் மட்டு.மாநகரசபைக்குள் வடிகான் புனரமைப்பு ; ஆளுநருடனான கலந்துரையாடலில் தீர்மானம்.


மட்டக்களப்பு மாநகர சபையின் நிர்வாக எல்லைக்குள்  தூர்ந்து காணப்படுகின்ற வடிகான்களை இராணுவத்தினரின் உதவியுடன் சுத்தப்படுத்தி புனரமைக்கும் பணிகளை முன்னெடுப்பதற்கான அங்கீகாரத்தினை கிழக்கு மாகாண ஆளுநர் இன்று மாநகர முதல்வருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின் வழங்கியுள்ளார். 

கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் மற்றும் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் ஆகியோருக்கு இடையிலான கலந்துரையாடல் இன்று புதன்கிழமை (20.05.2020) திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடலில் மட்டக்களப்பில் உள்ள வடிகான்கள் முகாமைத்துவம் பற்றி முதல்வர் அவர்களால் பல திட்டங்கள் முன்வைக்கப்பட்டன. வெள்ள காலங்களில் மக்கள் எதிர்நோக்கும்அசௌகரியங்கள் பற்றியும், அதற்கு தீர்வாக வடிகான்கள் அமைப்பு முறை மற்றும் பராமரிப்பு குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக வடிகான்கள் நிரம்பி வழிந்து மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர், இந்த பிரச்சினைக்கு தீர்வு காண பல முன்னெடுப்புக்கள் முதல்வர் அவர்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதில் மட்டக்களப்பு மாநகர எல்லையில் முழுமைத்துவமான வடிகான்கள் அமைப்பு மற்றும் வடிகான்கள் பராமரிப்பு பற்றிய திட்டங்கள் அமைந்துள்ளன.

ஆளுனருடனான கலந்துரையாடலில் வடிகான் விடயம் பற்றி பிரதான பேசு பொருளாக முதல்வர்அவர்களால் கருத்து பரிமாறப்பட்டதுடன், அதற்கான தீர்வுகள் சிலவற்றை நடைமுறைப்படுத்தஆளுநரால் அனுமதியும்  வழங்கப்பட்டுள்ளது.

மேற்படிக் கலந்துரையாடலில் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் நா.மணிவண்ணன், ஆளுநரின் செயலாளர், திட்டமிடல் பணிபாளர் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.