வேலையற்ற பட்டதாரிகள் அரசாங்கத்திடம் விடுத்துள்ள கோரிக்கை

மட்டக்களப்பு வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினர் இன்று புதன்கிழமை (27.05.2020) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் வைத்து அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்களை சந்தித்து கோரிக்கை கடிதம் ஒன்றை கையளித்தனர்.

மட்டக்களப்பு வேலையற்ற பட்டதாரிகள் சங்க தலைவர் கே.அனிதன் தலைமையில் மட்டக்களப்பு அரசாங்க அதிபருக்கு கையளிக்கப்பட்ட இக் கடிதத்தில் வேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனம் தொடர்பான தீர்வினை அரசு வழங்க வேண்டும் எனும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

குறித்த கடிதத்தில் நியமனம் இடைநிறுத்தப்பட்டமைக்கான தீர்வினை பெற்றுத்தர வேண்டும். அனைத்து பட்டதாரிகளும் கணக்கெடுக்கப்பட்டல் வேண்டும், கொரோனா சூழ்நிலையால் வருமானத்தை இழந்த பட்டதாரிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்,

தேர்தல் காலம் தள்ளிப் போகின்ற காரணத்தினால் நியமனக் கடிதம் பெற்ற பட்டதாரிகளை பணியில் அமர்த்தும் தீர்வினை பெற்றுத்தர வேண்டும் எனும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளது.

இவ் விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்கள் பட்டதாரிகளுக்கான நியமனம் தேர்தல் காலம் என்பதால் காலதாமதம் ஆகின்றது என்றும், தேர்தல் முடிந்த பின்பு இவர்கள் அனைவரும் பணிக்கு அமர்த்தப்படுவர் என்றும், குறித்த கோரிக்கை கடிதத்தினை ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அனுப்பி வைப்பதாகவும் தெரிவித்தார்.