இன்னலுறும் மக்களின் துயர்துடைக்க களத்தில் இறங்கிய சித்திவிநாயகர் ஆலயம்

மட்டக்களப்பு கல்லடி சித்திவிநாயகர் ஆலய பரிபாலன சபையினரால் ஊரடங்குச் சட்டத்தால் வருமானத்தினை இழந்த குடும்பங்களுக்கான நிவாரண பொதிகள் இன்று (01) வழங்கி வைக்கப்பட்டன.
 
கொரொனா நோய்ப்பரவலினைக் கட்டுப்படுத்தும் வகையில் அரசாங்கத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தால் கல்லடிப் பிரதேசத்தில் வருமானத்தினை இழந்துள்ள குடும்பங்களுக்கு உதவும் வகையில் ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய பரிபாலன சபையினரால் அத்தியவசியப் பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன.

கல்லடி செட்டித்தெரு, தங்கசாலை தெரு, கோயில் தெரு, முருங்கடித் தெரு ஆகிய பகுதிகளில் வசிக்கும் 100 குடும்பங்களுக்கான நிவாரண பொதிகளை குறித்த ஆலய பரிபாலன சபையின் தலைவரும் மாநகர முதல்வருமான தியாகராஜா சரவணபவன் பிரதேச முகாமையாளர்களிடம் வழங்கி வைத்தார்.

மேற்படி நிவாரணப் பொதிகள் கிராம சேவையாளர்களின் நேரடி கண்காணிப்பின் கீழ் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளன. இந்நிகழ்வில் மாநகர சபை உறுப்பினர்களான ம.நிஸ்கானந்தராஜா, த.இராஜேந்திரன் ஆகியோரும் ஆலய பரிபாலன சபையினரும் கலந்து கொண்டிருந்தனர்.