கற்றல் உபகரணங்களை வழங்கிய முதல்வருக்கு மரங்களை பரிசளித்து நன்றி கூறிய மாணவர்கள்

மாணவர்களின் கல்வி தரத்தினையும், அவர்களின் கற்றலின் மீதான ஆர்வத்தினையும் அதிகரிக்கும் நோக்கில் மட்டக்களப்பு மாநகர சபையினால் இன்று (17.02.2020) கற்றல்  உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட புறநகர் பகுதிகளில் வசிக்கும் வறிய மாணவர்களை ஊக்குவிக்கும் விதத்திலும், இடைவிலகல்களை குறைத்து, மாணவர்களுக்கு கற்றலின் மீதான ஆர்வத்தினையும் அதிகரிக்கும் நோக்கில் மட்டக்களப்பு மாநகர சபையினால் முன்னெடுக்கப்பட்டு வரும் கல்வி அபிவிருத்தி செயற்றிட்டத்தின் ஓர் அம்சமாக கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டு வருகின்றன.

இதன்படி மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட சின்ன உப்போடை திரேசா மகளிர் கல்லூரி, கல்லடி முகத்துவாரம் புனித இன்னாசியார் வித்தியாலயம் மற்றும்  நாவலடி நாமகள் வித்தியாலயங்களில் கல்வி கற்றுவரும் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் வழங்கி வைத்தார்.

மேற்படி கற்றல் உபகரணங்களை தமக்கு வழங்கிய வைத்தமைக்காக மட்டக்களப்பு மாநகர முதல்வருக்கும்  மாநகர சபைக்கும் புனித இன்னாசியார் வித்தியாலயம் மாணவர்கள் மரங்களை பரிசளித்து நன்றி கூறியதோடு,   மட்டக்களப்பு மாநகரின் பசுமை பேணும் செயற்றிட்டத்தில் தமது பங்களிப்பினையும் நல்குவதாகவும் தெரிவித்தனர். 

பாடசாலைகளின் அதிபர்களின் தலைமையில் இடம்பெற்ற வெவ்வேறு நிகழ்வுகளில் மட்டக்களப்பு மாநகர சபையின் உறுப்பினர்களான சஇவெட்டின் சந்திரகுமார், சி.ஜெயந்திரகுமார்,பே.சுரேஷ்குமார் ஆகியோருடன் மாநகர சழுக மேம்பாட்டு உத்தியோகத்தர் ச.சந்திரகுமார் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தனர்.