நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் இறுதியில்.. - அமைச்சர் விமல்

ஏப்ரல் மாதம் 25 அல்லது 26ஆம் திகதியில் பொதுத் தேர்தல் நடத்தப்படும் என சிறு மற்றும் நடுத்தர வர்த்தக அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

மன்னாருக்கு பயணம் செய்த அவர், இதன்போது செய்தியாளர்களிடம் பேசியதாவது;வடமாகாணத்தில் செயற்பட்டு வருகின்ற அரச நிறுவனங்கள், தொழிற்சாலைகளை கண்காணித்து அவற்றை அபிவிருத்தி செய்து முடிவுகளை எடுக்கவே எமது அமைச்சு சார்ந்த இந்த விஜயங்களை மேற்கொண்டுள்ளோம்.மந்தை உப்பு என்கிற நிறுவனம் இந்த நாட்டின் சந்தைக்கு பாவனையாளர்களுக்கான உப்பு உற்பத்தியை செய்கிறது. இந்த நிறுவனத்தை மேலும் மேம்படுத்தி இந்த பகுதி இளைஞர் யுவதிகளுக்கு தொழில்வாய்ப்பை வழங்கவும் எதிர்பார்க்கின்றோம்.


எமது நாட்டு தேவைகளுக்கு எமது நாட்டிலேயே உற்பத்திகளை செய்யவும் வேறு நாடுகளை எதிர்பார்க்காமலிருக்கவும் அதற்காக அமைச்சு என்கிற வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கவுள்ளோம். அதற்காகவே இந்த கண்காணிப்பு விஜயத்தையும் மேற்கொள்கின்றோம்.நான் தொழிற்சாலை அமைச்சரே தவிர, வர்த்தக அமைச்சரல்ல. தொழிற்சாலை உற்பத்திகள் குறித்து சிறந்த வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டிருந்தால் அவற்றை தொடர்ந்து நாங்கள் முன்நகர்த்துவோம். இப்போது இருக்கின்ற நாடாளுமன்றமானது காலாவதியான நாடாளுமன்றமாகும்.
69 இலட்சம் வாக்காளர்களின் அபிலாஷை இந்த நாடாளுமன்றத்தில் தற்போது இல்லை. அதனால் மார்ச் மாதம் 03ஆம் திகதிக்குப் பின் நாடாளுமன்றத்தைக் கலைத்து தற்போதைய மக்களின் பிரதிநிதித்துவத்தைப் பிரதிபலிக்கின்ற நாடாளுமன்றத்தை அமைப்போம்.ஏப்ரல் 25 அல்லது 26ஆம் திகதியில் பொதுத் தேர்தல் நடத்தப்படும். அப்போது எவ்வகையான அதிகாரங்கொண்ட நாடாளுமன்றம் அமைக்கப்படும் என்பதை பதியூதீனுக்கு பார்த்துக்கொள்ள முடியும்.நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் ஊடாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கம் அதிகாரம் மிக்க நாடாளுமன்றத்தை அமைக்கும்’ எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.