மட்டக்களப்புக்கு புதிய அரசாங்க அதிபர் நியமனம் ; தனது ஓய்வினை அறிவித்தார் தற்போதைய அரசாங்க அதிபர்

கடந்த இரண்டு ஆண்டுகளாக மாவட்ட அரசாங்க அதிபராக கடமையினை சிறப்பாக செய்வதற்கு ஒத்துழைப்பு புரிந்த அனைவருக்கும் நன்றி. அரச சேவையில் இன்றைய தினம் 32 வருடங்களும் 1 மாதமும் 10 தினங்களையும் பூர்த்தி செய்திருக்கின்றேன். என மட்டு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் இன்று ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.

பட்டதாரி ஆசிரியராக மகிழவட்டவானில் கடமையினை தொடங்கிய நான் இந்த மாவட்ட அரசாங்க அதிபர் வரை படிப்படியாக முன்னேறி வந்துள்ளேன். தற்போது தவிர்க்க முடியாத காரணத்தினால் ஒய்வு பெறவுள்ளேன்.

23.11.2017 இல் இருந்து இன்று வரை ஒரு குறுகிய காலத்தில் இந்த மாவட்டத்தினை நிருவகிக்க கிடைத்தது. இதில் உதவி புரிந்த அனைவருக்கும் எனது நன்றிகள்.

சமூக வலைத்தளங்களிலும், முகநூலிலும் அரச அதிபர் நியமனம் தொடர்பாக கூறப்படுகின்றது கவலையளிக்கின்றது. இதனால் மக்கள் பல குழப்பங்கக்ளுக்கு உள்ளாக்கப்படுகின்றார்கள்.

அரச அதிபர் என்பவர் மாவட்ட நிருவாகத்தை கவனிப்பதற்காக அரச உள்நாட்டு மாகாண உள்ளுராட்சி அமைச்சால் நியமிக்கப் படுபவர். இலங்கை நிருவாக சேவையில் அதியுயர் தரத்தைச் சேர்ந்த நேர்மை, திறமை படைத்தவர்கள் இந்தப் பதவிக்கு நியமிக்கப்படுகின்றார்கள்.

நேற்றைய தினம் அமைச்சரவையால்  புதிதாக ஒரு மாவட்ட அரசாங்க அதிபர் நியமிக்கப்பட்டிருக்கிறார் என அறியமுடிகிறது. எனினும் இது தொடர்பாக உத்தியோகபூர்வ தகவல் ஏதும் அறிவிக்கப்படவில்லை.
எவ்வாறாயினும் எனது சார்பாக நான் அன்புடன் வரவேற்கின்றேன்.

எவ்வாறாயினும் இலங்ககை நிருவாக சேவையில் இருந்து ஒய்வு பெறுவதற்கு வெறுமனே 10 மாதங்களும் 18 நாட்களுமே உள்ள நிலையில் எதுவித குற்றங்களும் இளைக்காமல், எதுவித விசாரணைகளுக்கு உட்படுத்தப்படாமல்,  கடந்த 21 வருடங்களுக்கு மேலாக இச் சேவையில் உள்ள என்னை எதுவித விசாரணையோ, முன்னறிவித்தலோ இன்றி இடமாற்றம் வழங்கப்படவுள்ளமையை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.

எனவே எனது கட்டாய ஒய்வு தினமான 21.12.2020 முன்னதாக சுய விருப்பிற்கான ஓய்விற்காக அமைச்சரவைக்கு விண்ணப்பித்துள்ளேன் என்பதை அறியத்தருகின்றேன் என மேலும் அவர் தெரிவித்தார்.