மட்டக்களப்பில் தொடரும் சீரற்ற கால நிலை –வெள்ள நீரை வெளியேற்றுவதில் மாநகரசபை தீவிரம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் கடும் மழை காரணமாக பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதுடன் மக்கள் தொடர்ந்தும் இடம்பெயரும் நிலையேற்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதன் காரணமாக பெருமளவானோர் இடம்பெயர்ந்துவருகின்றனர்.

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட நாவற்குடா கிழக்கில் அமைக்கப்பட்டுள்ள இடைத்தங்கல் முகாமில் அப்பகுதியில் இடம்பெயர்ந்துள்ள மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் வீடுகளில் நீர் புகுந்துள்ளதன் காரணமாக உறவினர்களின் வீடுகளில் வசித்துவருகின்றனர்.

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட நாவற்குடா, நொச்சிமுனை, உப்போடை, கூழாவடி, உப்போடை, ஊறணி, இருதயபுரம், கறுவப்பங்கேணி, நாவற்கேணி,கொக்குவில் உட்பட பெருமளவான பகுதிகள் நீரிpல் மூழ்கியுள்ளன.

இதேநேரம் வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதியில் இருந்து வெள்ள நீரை வெளியேற்றும் பணிகளை மட்டக்களப்பு மாநகரசபை முன்னெடுத்துவருகின்றது.

மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன்,பிரதி முதல்வர் க.சத்தியசீலன்,ஆணையாளர் க.சித்திரவேல் மற்றும் வட்டார மாநகரசபை உறுப்பினர்கள் ஆகியோர் நேரடியாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வெள்ளநீர் வெளியேற்றும் நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.

இதேபோன்று மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசனும் வெள்ளப்பாதிப்பு பிரதேசங்களை பார்வையிட்டதுடன் வெள்ள நீர் வெளியேற்றும் பணிகளையும் பார்வையிட்டு ஆலோசனைகளை வழங்கினார்.