பெரியகல்லாறு மத்திய விளையாட்டுக்கழகத்தின் 12வது கழக தினம்

விளையாட்டுக்கழகங்கள் விளையாட்டுகளுடன் மட்டும் நின்றுவிடாது சேவை மனப்பான்மையுடன் செயற்படும்போது பல்வேறு துறைகளிலும் சமூகம் முன்னேற்றமடையும் என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் தெரிவித்தார்.

அதற்கு முன்னுதாரணமாக செயற்படும் கல்லாறு மத்திய விளையாட்டுக்கழகத்தினை பாராட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.
பெரியகல்லாறு கல்லாறு மத்திய விளையாட்டுக்கழகத்தின் 12வது கழக தினம் இன்று மாலை சிறப்பாக அனுஸ்டிக்கப்பட்டது.

பெரியகல்லாறு கலாசார மண்டபத்தில் கல்லாறு மத்திய விளையாட்டுக்கழகத்தின் தலைவர் த.விவேகச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உபுல் குணவர்த்தன உட்பட பாடசாலை அதிபர்கள்,கிராமத்தின் முக்கியஸ்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

கடந்த 12 வருடங்களாக மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திற்குட்பட்ட பல்வேறு சாதனைகளை படைத்த மாணவர்கள் மற்றும் பெரியகல்லாறில் சாதனை படைத்த சாதனையாளர்களை கௌவிக்கும் வகையிலான நிகழ்வினை பிரமாண்டமான முறையில் நடாத்திவருகின்றது.

அதன் கீழ் இம்முறையில் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை,உயர்தர பரீட்சை,சாதாரண தரம் உட்பட பல்வேறு சாதனைகளை படைத்த மாணவர்கள் இதன்போது கௌரவிக்கப்பட்டனர்.

அத்துடன் பெரியகல்லாறுக்கு பெருமை சேர்ந்தவர்கள் மற்றும் சாதனை படைத்தவர்களும் இதன்போது கௌரவிக்கப்பட்டதுடன் அதிதிகளும் கௌரவிக்கப்பட்டனர்.

இந்த நிகழ்வின் சிறப்பம்சமாக பெரியகல்லாறு மாணவர்களினால் பல்வேறு கலை நிகழ்வுகளும் நடாத்தப்பட்டது.