வழங்கிய உறுதிமொழிகளை கோத்தா நிறைவேற்றுவார் –திடமாக நம்பும் மாநகரசபை உறுப்பினர்

கிழக்கில் தமிழ் மக்கள் கோத்தபாயவிற்கு முழுமையாக வாக்களிக்காவிட்டாலும் அளிக்கப்பட்டுள்ள வாக்குகளின் அடிப்படையில் வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றுவார் என்று முழுமையாக நம்புவதாக மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினரும் மகளிர் அணி தலைவியுமான திருமதி செல்வி மனோகர் தெரிவித்தார்.

07வது ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்ஸ தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரினால் இன்று மாலை அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் அவரின் ஆதரவாளர்கள் மகிழ்ச்சி ஆரவாரங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.

மட்டக்களப்பு,கல்லடி உப்போடை பகுதியில் இன்று மாலை மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் திருமதி செல்வி மனோகர் தலைமையில் பட்டாசுகள் கொழுத்தப்பட்டு பால்சோறும் மக்களுக்கு பகிரப்பட்டது.

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் கொண்டுகூடிய ஆதரவாளர்கள் இந்த மகிழ்ச்சி ஆரவாரங்களில் ஈடுபட்டனர்.

இதன்போது நூறு மாணவர்களுக்கும் அப்பியாசக்கொப்பிகளும் வழங்கிவைக்கப்பட்டன.

இந்த வெற்றி ஆரவார நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய திருமதி செல்வி மனோகர் இந்த நாட்டில் எதிர்காலத்தில் புதிய மாற்றங்கள் ஏற்படும் எனவும் தெரிவித்தார்.