மக்களின் வரிப்பணத்தில் அபிவிருத்தி செய்யப்படும் கல்லடி தோமஸ் அன்டணி குறுக்கு வீதிகள்.

மக்களின் வரிப்பணத்தினை மக்களுக்கே கொண்டு செல்வோம் எனும் கருத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட தோமஸ் ஆண்டனி குறுக்கு வீதிகளைப் புனரமைக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றன. 

மாநகர சபைக்கு மக்களினால் செலுத்தப்பட்ட வரிப்பணத்தினை முழுமையாக மக்களுக்கே கொண்டு செல்ல வேண்டும் எனும் நோக்கில் மட்டக்களப்பு மாநகர சபையினால் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி பணிகளின் ஓர் அம்சமாக 12ம் வட்டாரத்திற்குட்பட்ட கல்லடி புது முகத்துவாரம் தோமஸ் அண்டனி குறுக்கு வீதிகளை கொங்றிட் வீதிகளாக அபிவிருத்தி செய்யும் பணிகள் இடம்பெற்று வருகின்றன. 

3 மில்லியன் ரூபாய் செலவில் கிட்டத்தட்ட 330 மீற்றர் நீளத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் குறித்த வீதிகளின் அபிவிருத்திப் பணிகளை மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன், மாநகர சபையின் உறுப்பினர்களான சீ.ஜெயந்திரகுமார், பே.சுரேஸ்குமார் மாநகர பொறியியலாளர் சித்திரதேவி லிங்கேஸ்வரன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.

மழை காலங்களில் வெள்ள நீர் தேங்கி அன்றாட போக்குவரத்து செயற்பாடுகளை மேற்கொள்ள முடியாமல் பாடசாலை மாணவர்களும், பொதுமக்களும் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டுவந்தாகவும், தற்போது இவ் வீதியை புனரமைத்து தந்த மாநகர முதல்வருக்கும் வட்டார உறுப்பினர்களுக்கும் குறித்த வீதிகளில் வசிக்கும் பொது மக்கள் தமது நன்றிகளை தெரிவித்தனர்.