சிறுவர்களின் உரிமைகளையும், அவர்களின் பாதுகாப்பினையும் உறுதிப்படுத்தும் விதத்தில் சர்வதேச சிறுவர் தினமானது அக்டோபர் முதலாம் திகதி நாடெங்கிலும் கொண்டாடப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் மட்டக்களப்பு மாநகர சபையினால் “சிறுவர்களின் சுதந்திரமான செயற்பாட்டிற்கு வழியமைத்துக் கொடுப்போம்” எனும் தொணிப் பொருளில் இம்முறை சிறுவர் தின நிகழ்வுகள் ஒழுங்கு செய்யபட்டுள்ளன.
மாநகர சபையின் பரிபாலனத்தின் கீழ் இயங்கிவரும் நாவற்குடா சுத்தானந்தா பாலர் பாடசாலை மற்றும் இருதயபுரம் கிழக்கு மாநகர பாலர் பாடசாலைகளில் இடம்பெற்ற சிறுவர் தின நிகழ்வுகளில் மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டதோடு, சிறுவர்களுக்கான பரிசில்களையும் வழங்கி வைத்தார்.
சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பில் பெற்றோர்க்கு அறிவுறுத்தும் வகையிலும் அவர்களின் ஆற்றல்களை வெளிக்கொணரும் நோக்கிலுமாக ஒழுங்கு செய்யப்பட்டிருந்த மேற்படி நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மாநகர சபையின் பிரதி ஆணையாளர் உ.சிவராஜா, மாநகர சபையின் உறுப்பினர்களான வே.தவராஜா, சீ.ஜெயந்திரகுமார், திருமதி.பற்றிமா பல்தசார், திருமதி குஜாஜினி பாலகிருஸ்ணன் ஆகியோரும் கலந்து கொண்டதோடு மாணவர்களை வாழ்த்தி, பரிசில்களையும் வழங்கி வைத்தனர்.