மகிந்த வந்தால் நாடு மீண்டும் வறுமைக்குள் தள்ளப்படும் -முன்னாள் கிழக்கு மாகாண ஆளுனர்

மகிந்தராஜபக்ஸவிடம் இந்த நாடு செல்லுமானால் மீண்டும் வறுமை நிலைக்கு நாடு தள்ளப்படும் ஆபத்து உள்ளதாக முன்னாள் கிழக்கு மாகாண ஆளுனரும் முன்னாள் வெளிவிவகார அமைச்சருமான ரோகித போகொல்லாகம தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவினை ஆதரிக்கும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் பிரதேசத்திற்கான முதலாவது கூட்டம் நேற்று மாலை மட்டக்களப்பு கிரான்குளத்தில் நடைபெற்றது.

கிரான்குளத்தில் உள்ள தனியார் விடுதியில் சஜித் பிரேமதாச ஜெனரேசன் அமைப்பின் ஏற்பாட்டில் இந்த தமிழ் பகுதிக்கான முதலாவது தேர்தல் பிரசாரக்கூட்டம் நடைபெற்றது.

சஜித் பிரேமதாச ஜெனரேசன் அமைப்பின் மாவட்ட இணைப்பாளர் எம்.ஜெகவண்ணன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கிழக்கு மாகாண ஆளுனரும் முன்னாள் வெளிவிவகார அமைச்சருமான ரோகித போகொல்லாகம பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

ஐக்கிய தேசிய கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் மங்கள செனவிரட்ன,முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி சுவர்ணராஜா உட்பட பெருமளவான ஆதரவாளர்கள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த கிழக்கு மாகாண முன்னாள் ஆளுனர்,
குடந்த காலத்தில் கடத்தல்கள்,காணாமல்போதல்கள்,வெள்ளைவான் கலாசாரங்களை தமிழ் மக்கள் மறந்திருக்கமாட்டார்கள்.இந்த நிலையினை மீண்டும் ஏற்படுவதற்கு நாங்கள் அனுமதிக்கமுடியாது.நாங்கள் சஜீத் பிரேமதாசவுக்கு வாக்களிக்காவிட்டால் மீண்டும் அந்த யுகம் ஏற்படுவதை தடுக்கமுடியாமல்போகும்.

முகிந்த ராஜபக்ஸ ஆட்சிக்காலத்தில் இந்த நாட்டின் வளங்கள் சூறையாடப்பட்டதுடன் திறைசேரியும் வெறுமையாக்கப்பட்டது.ஐக்கிய தேசிய கட்சி ஆட்சிக்கு வந்தபோதே இந்த நிலை மாற்றப்பட்டது.மீண்டும் அந்த ஆட்சியேற்படுமானால் இந்த நாடு மீண்டும் வறுமை நிலைக்குள் தள்ளப்படும் ஆபத்து காணப்படுகின்றது.அந்த நிலையேற்படுவதற்கு அனுமதிக்ககூடாது.
இந்த நாட்டின் வளங்களை சூறையாடுபவர்கள் தேவையில்லை,கொள்ளையர்கள் தேவையில்லை.இந்த நாட்டு மக்கள் அனைவரையும் ஒன்றாக நேசிக்ககூடிய,நேர்மையான முறையில் செயற்படக்கூடிய தலைவர் ஒருவரே தேவை.அந்த தலைமைத்துவமே இன்று சஜித் பிரேமதாச என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர்.