களுவாஞ்சிகுடி இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் போராட்டம் -மக்கள் பாதிப்பு

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் இன்று பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டதுடன் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

இன்று காலை முதல் பஸ்களை சாலைக்குள் முடக்கிய ஊழியர்கள் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டதுடன் இன்று பகல் சாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

ஒப்பந்த அடிப்படையில் வேலைசெய்யும் ஊழியர்களை நிரந்தரமாக்ககோரியும் தமது சம்பள நிலுவைகளை வழங்ககோரியுமே இந்த போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.

தமது கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு களுவாஞ்சிகுடி போக்குவரத்து சாலை ஊழியர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டம் காரணமாக களுவாஞ்சிகுடியில் இருந்து மிகவும் கஸ்ட பிரதேசங்களுக்கான போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டன.படுவான்கரை பகுதியில் உள்ள மாணவர்கள் இலங்கை போக்குவரத்து சேவையினையே நம்பியிருப்பதனால் இன்றைய போராட்டம் காரணமாக அவர்கள் பெரும் கஸ்டங்களை எதிர்கொண்டனர்.