கொட்டும் மழையிலும் பல்லாயிரக்கணக்கானோர் புடைசூழ நடைபெற்ற தான்தோறீஸ்வரர் தேர் உற்சவம்

இலங்கையின் பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றாகவும் கிழக்கு மாகாணத்தின் தேர் ஓடும் முதல் ஆலயம் எனும் பெருமையினையும் கொண்ட கிழக்கிலங்கையின்  வரலாற்று சிறப்பு மிக்க மட்டக்களப்பு கொக்கட்டிசோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் சித்திர தேரோட்டம் கொட்டும் மழையின் மத்தியிலும் ஆயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது.

வடகிழக்கு மாகாணத்தில் தமிழ் தேசியத்தின் வரலாற்றுசின்னமாகவும் தமிழர்களின் பாரம்பரிய பண்பாட்டு பொக்கிசமாகவும் கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரம் காணப்படுகின்றது.

கல் நந்தி புல் உண்டு போர்த்துக்கீசரை உதைத்து கல்லாக்கிய அற்புத திருத்தலமாக  கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரம் விளங்குகின்றது.

கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் மஹோற்சவம் கடந்த 01ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

தொடர்ந்து 15 தினங்கள் ஆலயத்தின் தினமும் தம்ப பூஜை,வசந்த மண்டப பூஜை சுவாமி உள்வீதியுலா வெளிவீதியுலா நடைபெற்றுவந்தது.

ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ மு.கு.சச்சிதானந்த குருக்கள் தலைமையில் நடைபெற்ற வசந்த மண்டபபூஜையினை தொடர்ந்து பார்வதிசிவன்,பிள்ளையார்,வள்ளிதேவசேனா சமேக சுப்பிரமணியன் ஆகியோர் வெளிவீதி கொண்டுவரப்பட்டு அங்கு சித்திரத்தேரில் ஆரோகணிக்கப்பட்டதை தொடர்ந்து விசேட பூஜைகள் நடைபெற்றன.

தேர் உற்சவத்திற்காக தொன்றுதொட்டு நடைபெற்றுவரும் வழமையான நடைமுறைகளை தொடர்ந்து வடமிழுக்க தேர் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.

இந்த தேர் உற்சவத்தில் இலங்கையின் பல பாகங்களிலும் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.