மட்டக்களப்பு குசலவ மன்னரின் குமரக் கடவுளுக்கு திருவிழா!



(செங்கலடி நிலவன் , கே.சுபோ)

மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகவும் பழமையான வரலாற்றினைக் கொண்ட ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச செயலகத்திற்குட்பட்ட கரடியனாறு குசனார் குமரன் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தினை முன்னிட்டு மாபெரும் பாதயாத்திரை இன்று(25) நடைபெற்றது

மட்டக்களப்பு மாவட்டத்தின் வரலாற்றின் பொக்கிசமாக இந்த குசனார் மலை கருதப்படுகின்றது.

அங்கு காணப்படும் எச்சங்கள் 2000 வருடத்திற்கு முன்னர் வாழ்ந்த தமிழர்களின் எச்சங்களென ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இத்தனை சிறப்புமிக்க இந்த ஆலயத்தின் வருடாந்த உற்சவம் இன்று( 25) ஆம் திகதி ஆரம்பமாகி பக்தர்கள் பாதயாத்திரையாக முருகனை எடுத்துச் சென்று கொடியேற்றம் செய்து எதிர்வரும் 30 ம் திகதி இயற்கையாக அமையப்பெற்ற தீர்த்த கேணியில் நடைபெறும் தீர்த்த உற்சவத்துடன் இனிதே நிறைவடைய உள்ளது. 

மலையின் மீது இயற்கை அழகுடன் தமிழர்களின் பாரம்பரியத்தினையும் சுமந்ததாக காணப்படும் குசனார் குமரன் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தினை முன்னிட்டு ஆலயத்தில் சிரமதான பணிகள் இன்று முன்னெடுக்கப்பட்டன.

ஆலய பரிபாலனசபையினர் கல்லடி கதிர்காமம் பாதயாத்திரை குழுவினர் செங்கலடி சித்திவிநாயகர் ஆலய நிர்வாகத்தினர் செங்கலடி வர்த்தக சங்கத்தினர் இணைந்து 
 இன்றைய பாதயாத்திரையை  முன்னெடுத்தனர்.

வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே இவ் ஆலயத்தில் வழிபாடுகள் நடைபெறுகின்றன.

குறித்த ஆலயத்தின் மகிமையினையும் அதன் வரலாற்று சிறப்பினையும் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் அறிந்துகொள்ளும் வகையில் கல்லடி கதிர்காமம் பாதயாத்திரை குழுவினரால் கடந்த ஏழு வருடமாக இந்த பாதயாத்திரை மேற்கொள்ளப்படுவருதாக அக்குழுவினர் தெரிவித்தனர்.

இன்று (25)  அதிகாலை 04.00மணியளவில் கல்லடி சித்திவிநாயகர் ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகி குசலான் மலை குமரனின் பாத பாதயாத்திரை
செங்கலடி பிரதேசம் ஊடாக பதுளை வீதி வழியாக  கரடியணாறு சென்று அங்கிருந்து காட்டு வழியாக ஆலயத்தை சென்றடைந்து இரவு நடைபெறும் கொடியேற்றத்துடன் வருடாந்த திருவிழா ஆரம்பமாக உள்ளது.