மந்திரம் இல்லை,பகட்டு இல்லை தமிழோசை இசைபாடலுடன் நடைபெற்ற ஈழத்து திருச்செந்தூர் கொடியேற்றம்

ஈழத்து திருச்செந்தூர் எனப்போற்றப்படும் மட்டக்களப்பு கல்லடி திருச்செந்துர் முருகன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் இன்று கொடியேற்றதுடன் ஆரம்பமானது.

கிழக்கிலங்கையின் நீண்ட வரலாற்றினைக்கொண்ட இந்த ஆலயமானது மகாதுறவி சுவாமி ஓங்காரானந்தா சரஸ்வதி அவர்களினால் உருவாக்கப்பட்டு ஒரு சித்திர்பீடமாக அருள்பாலித்துவருகின்றது.

இலங்கையில் ஆகம முறைப்படி அமைக்கப்பட்ட ஆலயம் ஒன்றில் தமிழ் முறைப்படி வேதங்கள் ஓதப்பட்டு பூஜைகள் நடைபெற்றுவருகின்றமை சிறப்பம்சமாகும்.

இந்த ஆலயத்தில் நடைபெறும் கொடியேற்ற நிகழ்வுகளும் ஆகம விதிகளுக்கு அப்பால் பக்தர்களும் இணைந்து கொடியேற்ற நிகழ்வினை நடத்துவது சிறப்பாகும்.

இன்று காலை கல்லடி சித்திவிநாயகர் ஆலயத்தில் இருந்து கொடிச்சீலை கொண்டுவரும் நிகழ்வு நடைபெற்றதை தொடர்ந்து மஹா யாகம்,அபிசேகம் ஆராதனை நடைபெற்று மூலஸ்தானத்தில் இருந்து கொடிச்சீலை எடுத்துவரப்பட்டு ஆலய உள்வீதி யுலா நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து கொடித்தம்பம் அருகில் தமிழில் கொடியேற்ற பக்தி பாடல்கள் இசைக்கப்பட்டு கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது.
கொடியேற்றத்தினை தொடர்ந்து முருகப்பெருமானுக்கு விசேட பூஜைகள் நடைபெற்று சுவாமி வீதியுலாவும் நடைபெற்றது.

பத்து தினங்கள் நடைபெறவுள்ள ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தில் எதிர்வரும் 29ஆம் திகதி தேர் உற்சவமும் 30ஆம் திகதி தீர்த்தோற்சவமும் நடைபெறவுள்ளது.

இன்றைய கொடியேற்ற மஹோற்சவத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பெருமளவானோர் கலந்துகொண்டனர்.