மாமாங்கேஸ்வரர் உற்சவத்தினை சிறப்பித்த நுண்கலை பீடம் -மட்டக்களப்பின் பாரம்பரியம் மக்கள் பார்வைக்கு

கிழக்கு பல்கலைக்கழகத்தின் நுண்கலை பீடத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றிலில் பாரம்பரிய அரங்க விழா என்னும் தலைப்பிலான ஆற்றுகைகளும் கண்காட்சியும் நேற்று ஆரம்பமானது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பாரம்பரிய கலாசாரத்தினையும் எதிர்கால சந்ததிக்கு கொண்டுசெல்லும் வகையில் இந்த நிகழ்வு ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.

கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் நடைபெற்றுவரும் வேளையில் இந்த நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதன்ஆரம்ப முதல்நாள் நிகழ்வு அண்ணாவியார் வேலன் சீனித்தம்பி களரியில் கிழக்கு பல்கலைக்கழக நுண்கலைத்துறை தலைவர் சு.சந்திரகுமார் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் சார்பாக சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி இரா.இராஜேந்திரா கலந்துகொண்டதுடன் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வ.வாசுதேவன்,மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளர் கா.சித்திரவேல்,மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய வண்ணக்கர்மார்களான தி.விக்ரமன், க.புவனச்சந்திரா, .உ.சுவேந்திரகுமார் மற்று கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது ஆற்றுகைகலைக்கு புத்துயிர் அளித்துவரும் கலைஞர்களான எஸ்.சந்திரசேகரம் அவரது மனைவி விஜயலட்சுமி சந்திரசேகரம்,ஆறுமுகம் இராஜரட்னம் ஆகியோர் மாண்புபெறும் கலைஞர்களாக கௌரவிக்கப்பட்டது.

அத்துடன் கிழக்கு பல்கலைக்கழகத்தின் நுண்கலைத்துறை மாணவர்களின் வசந்தன் கூத்து நடைபெற்றதுடன் பாரம்பரிய கலைப்பொருட்களின் கண்காட்சியும் திறந்துவைக்கப்பட்டது.