முனைப்பு ஸ்ரீ லங்கா நிறுவனத்தினால் வறிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கிலான செயற்திட்டமொன்று ஆரையம்பதி பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டது.
கடந்த சில வருடங்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பொருளாதார நிலையில் பின்தங்கிய , யுத்தம் மற்றும் வன்செயல் பாதிப்புக்குள்ளான, பெண் தலமைதாங்கும் குடும்பங்கள், மாற்றுத்திறனாளிகளை கொண்ட நூற்றுக்கு மேற்பட்ட வறுமைக் கோட்டிற்க்குட்பட்ட குடும்பங்களுக்கு பல்வேறு வகையிலான வாழ்வாதார உதவிகளை முனைப்பு ஸ்ரீ லங்கா நிறுவனம் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் ஆரையம்பதி மேற்கு பிரதேசத்தில் வசித்து வரும் வறிய குடும்பமொன்றின் வாழ்வாதாரத்திற்க்கான உதவிகள் வழங்கி வைக்கப்பட்டது.
முனைப்பு நிறுவனத்தின் தலைவர் மாணிக்கப்போடி சசிகுமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி சத்தியானந்தி, முனைப்பு ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் சுவிஸ் நாட்டு கிளைத் தலைவர் மா.குமாரசுவாமி, முனைப்பு நிறுவனத்தின் செயலாளர் இ.குகநாதன், பொருளாலர் தயானந்தரவி ஆகியோர் கலந்து கொண்டனர்.